சமீபத்தில் அமேசான் காடுகளுக்குச் சென்ற அமெரிக்க பெண்ணின் கண் இமை, கை, மற்றும் கழுத்தில் இருந்து மூன்று உயிருள்ள பூச்சிகள் அகற்றப்பட்டன.
மயாசிஸ் என்பது மனித திசுக்களில் உள்ள ஈலார்வாவின்(புழு) தொற்று ஆகும். இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல பகுதிகளில் நிகழ்கிறது.
இந்நிலையில், அமெரிக்கபெண் வலது கண்ணிமை வீக்கம் போன்ற அறிகுறிகளுடன் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மயாசிஸ் (போட்ஃபிளை) அகற்ற முடியவில்லை.
மேலும் இவர் இதே அறிகுறிகளுடன் டெல்லியின் வசந்த் குஞ்ச்சில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் கடந்த 4-6 வாரங்களாக தனது கண் இமைகளுக்குள் ஏதோ அசைவதாக தெரிவித்தார்.
அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அமெரிக்க பெண்ணிடம் விசாரித்த போது அவர் இரண்டு மாதங்களுக்கு முன் அமேசான் காடுகளுக்கு சென்றதை கூறினார்.
இதை அறிந்த மருத்துவர்கள் அப்பெண்ணின் கண்ணில் அரிதான மியாசிஸ் என்ற ஒரு வகை திசு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, தில்லியில் தனியார் மருத்துவமனையில் (திங்கட்கிழமை ) வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சையின் போது, அமெரிக்கபெண்ணின் உடலில் இருந்து கிட்டத்தட்ட 2 செ.மீ அளவுள்ள மூன்று உயிருள்ள பூச்சிகள் அகற்றப்பட்டது.
அறுவைசிகிச்சை பிரிவை சேர்ந்த மருத்துவர் நரோலா யாங்கர், கூறுகையில், கிட்டத்தட்ட 2 செ.மீ அளவுள்ள மூன்று உயிருள்ள பூச்சிகளை அகற்றியதாகவும், ஒன்று வலது கண்ணிமையிலிருந்து, 2-வது கழுத்தின் பின்புறம் மற்றும் 3-வது வலது முன்கையிலிருந்து அறுவைசிகிச்சையின் மூலம் அகற்றினார்.
அறுவைசிகிச்சை 10-15 நிமிடங்களில் அனைத்து அசெப்டிக் முன்னெச்சரிக்கைகளுடன், எந்த மயக்க மருந்தும் இல்லாமல் முடிந்தது. அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுடன் மருத்துவர்கள் அவரை ஆபத்தான மனிதபூச்சிகளிடம் இருந்து காப்பாற்றினர்.
மயாசிஸ் நுட்பமான சவ்வுகளில் துளையிட்டு, அடிப்படை கட்டமைப்புகளுக்கு உணவளிக்கிறது. மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற வெப்பமண்டல மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளிலிருந்தும் இது போன்ற பாதிப்புகள் முன்னதாகவே பதிவாகியுள்ளன.
இந்தியாவில் இதுபோன்று பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவதாகவும், மயாசிஸ் அகற்றப்படாவிட்டால். அது திசுக்களின் கணிசமான அழிவை ஏற்படுத்தும். மேலும் அரிதான மூளை காய்ச்சல் போன்றவற்றிக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறினர்.