சென்னை:
ஆண்டாள் குறித்து வைரமுத்து எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரைக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ் தெரிந்த நீதிபதிகள் அமர்வுக்கு விசாரணையை மாற்றம் செய்தது.
மேலும், மத உணர்வுகளை புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று கூறிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு, நீதிபதிகள், நீதிமன்றங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துகள் பரப்பப் படுவதாக வேதனை தெரிவித்தது.
வைரமுத்துவின் அவதூறுக் கட்டுரையை தடை செய்ய அல்லது ரத்து செய்ய, செல்லாததாக்க அறிவிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் மயிலை சத்யா ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, எந்த மத உணர்வுகளுக்கு எதிரான கருத்தையும் அனுமதிக்க முடியாது என்றும், இத்தகைய நிலை கவலையை அளிக்கிறது எனவும் கண்டனம் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை தமிழ் அறிந்த நீதிபதிகள் அமர்வு விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார்.