மதுரை: மதுரையில் பட்டப் பகலில் இந்தியன் வங்கி கிளையில் ரூ.10 லட்சம் பணத்தை திருடிக் கொண்டு ஓட்டம் பிடித்த மர்ம நபர் குறித்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் வெளியிட்டனர். அவர்களில் ஒருவர் கொடுக்கும் கமெண்ட், இப்படி பணத்தை வெச்சிட்டுப் போனா, எனக்கே எடுக்கணும்னு ஆசை வருது என்கிறார்.
மதுரை கீழ ஆவணி மூலவீதி விளக்குத் தூண் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் இருந்து ரூ.10 லட்சத்தை மர்ம நபர் திருடிச் சென்றார். திங்கள்கிழமை அன்று வங்கியின் மாடியில் பணியாளர் ஒருவரின் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில், சக ஊழியர்கள் அனைவரும் கீழிருந்து மேலே சென்று, மாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
அப்போது, காசாளர் அறையில் இருந்த ரூ. 10 லட்சத்தை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளதாகக் கூறப்பட்டது. பணியாளர்கள் எவரும் இல்லாததை பயன்படுத்தி திருடப் பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
காசாளர் அறையில் இருந்த ரூ.10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. வங்கியில் இருக்கும் சிசிடிவி கேமராவில் என்ன மாதிரியான காட்சிகள் பதிவாகி இருக்கிறது, யார் உள்ளே நுழைந்தது என்று போலீஸார் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது, வங்கி வாடிக்கையாளராக வந்த நபர் ஒருவர், இருக்கையில் அமர்ந்த படி அனைத்தையும் கவனிக்கிறார். இருக்கும் ஓரிருவரும் நகர்ந்த பின்னர், தனி ஆளாக அமர்ந்திருக்கும் அவர், வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு காசாளர் இருக்கும் கேபினில் எட்டி பணத்தை எடுக்கிறார். இரு முறை முயன்று இரு முறையாக பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறார்.
இந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் வெளியிட்டனர். இந்த காட்சிகள் குறித்து போலீஸார் சிலர் சேர்ந்து, எப்படி திருட்டு நடைபெற்றது, எந்த கணத்தில் எடுத்தார் என்று அவர்களுக்குள் பேசிக் கொள்கின்றனர். அப்போது ஒருவர், காட்சிகளைக் கண்டு லைவ் கமெண்ட்ரி கொடுக்கிறார். உடன் இருக்கும் ஒரு போலீஸ்காரர் சொல்வதுதான், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது, திருடனுக்கும் போலீஸாருக்கும் எந்த வேற்றுமையும் இல்லை என்பதும், சந்தர்ப்பத்துக்காகத்தான் அனைவருமே காத்திருக்கின்றனர் என்பது போலும் தோற்றம் தருகிறது.
திருட்டைத் தடுக்க வேண்டியதும் எந்த விதமான சந்தர்ப்பத்திலும், தவறு செய்யாமல் தவறைத் தடுக்க வேண்டியதும்தான் காவலர்களின் மனப்பக்குவமாக இருக்க வேண்டும். இங்கே அந்த மனப்பாங்கை பிறழ விட்டு ஒரு காவல், இப்படி ஒரு சந்தர்ப்பம் இருந்தால், எனக்கும் திருட ஆசையாகத்தான் இருக்கிறது என்கிறார். இப்படிப் பட்ட ஓர் எண்ணம் போலீஸாருக்கு தோன்றுவதே, உளவியல் ரீதியாக போலீஸாரை நேர்மையான வழியில் செல்ல தயார் செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது!