ஆந்திர மாநிலத்தில் 13 வயது சிறுவனுக்கும் 23 வயது இளம் பெண்ணுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக வெளியான புகைப்படத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. இதை அடுத்து முதற்கட்ட விசாரணையில் இறங்கிய போலீஸார், அந்தச் சிறுவனின் தாய் நோயுற்று இருந்ததாகவும், தன்னையும் தனக்குப் பின் தன் மகனையும் யாரும் பார்த்துக் கொள்ள மாட்டார்கள் என நினைத்ததால், சிறுவனாக இருந்தாலும் பரவாயில்லை என்று தன் மகனுக்கு உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்து வைத்ததாகவும் கூறியுள்ளனர்.
தனது மகனுக்கு மணமுடிக்க முடிவு செய்த அந்தத் தாய், சொந்த பந்தங்கள் மூலம் தீவிரமாக தேடி, ஒருவழியாக தூரத்து உறவு முறையில் 23 வயதுப் பெண்ணைத் தேர்வு செய்துள்ளார். அந்தத் தாயின் முழு ஏற்பாட்டின் பேரில்தான் இந்தத் திருமணம் நடந்துள்ளது என்று கூறியுள்ளனர் போலீஸார்.
இவ்வளவு ரகசியமாக திருமணம் செய்த போதும், அந்தத் திருமண நிகழ்வுக்கு வந்த உறவினர்களில் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். அது வைரலாகப் பரவியது, போலீஸார் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
போலீஸார் விசாரிப்பது குறித்து அறிந்த சிறுவனின் பெற்றோர், உறவினர்கள், பெண் வீட்டார் என அனைவரும் தலைமறைவாகி விட்டனர். விசாரிக்கச் சென்ற போலீஸார், பூட்டுப் போட்டுப் பூட்டியிருந்த வீட்டைக் கண்டு திரும்பியுள்ளனர். இருப்பினும், போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனராம். இந்தச் சம்பவம் குறித்து துணை ஆட்சியர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்
இதே சம்பவம் குறித்து இன்னொரு தகவல் வெளியானது. ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் கவுதாலம் அருகிலுள்ள உப்பரஹால் கிராமத்தை சேர்ந்த அந்த 13 வயது சிறுவனும், கர்நாடக மாநிலம் சனிக்கனூரைச் சேர்ந்த 23 வயது அய்யம்மாள் என்பவரும் தூரத்து உறவினர்கள் என்றும், இதனால் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் அடிக்கடி சென்று வந்தபோது பழக்கம் ஏற்பட்டு, காதல் மலர்ந்ததாகவும், கடந்த மாதம் 27ஆம் தேதி உப்பரஹால் கிராமத்தில் அவர்களுக்கு பெற்றோரே திருமணத்தை நடத்தி வைத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் வேறொரு தகவல் உலா வருகிறது.