சாமானிய மக்கள் கேட்டுக் கொண்டிருந்த ஒரு கேள்வியை கேரள நீதிமன்றம் கேட்டிருக்கிறது. பாஜக., ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட இந்து இயக்கத்தினர் கேட்டுக் கொண்டிருந்த கேள்வியை கேரள உயர் நீதிமன்றமும் கேட்டுவிட்டது…
அப்படி என்ன கேட்டுவிட்டது? சபரிமலைக்கு ஒரு நிலை… சர்ச்சுக்கு மற்றொரு நிலை என, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் இரட்டைநிலை கடைபிடிப்பது ஏன்? என கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் கேட்ட அந்தக் கேள்வியை இன்று பேசாதவர்கள் இல்லை!
பிறவம் கிறிஸ்தவ தேவாலய விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரள அரசு இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதாக கேரள ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரளாவின் கோட்டயம் அருகே உள்ள பிறவம் பகுதியில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது.
மலங்கரை சபைக்கு சொந்தமான இந்த சர்ச் நிர்வாகத்திற்காக யாகோபாயா மற்றும் ஆர்த்தடாக்ஸ் ஆகிய இரு பிரிவுகளுக்கு இடையே மோதல் இருந்து வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆர்த்தடாக்ஸ் பிரிவினர்தான் நிர்வாக பொறுப்பை ஏற்கவேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து ஆர்த்தடாக்ஸ் சபையினர் சர்ச்சிற்குள் செல்ல முயன்றனர். ஆனால் யாகோபாயா பிரிவினர் அவர்களை உள்ளே விட மறுத்தனர். இதையடுத்து இரு பிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து அரசு தரப்பில் இரு பிரிவினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது தங்கள் பிரிவைச் சேர்ந்த 200 பேர் சர்ச்சிற்கு சென்று பிரார்த்தனை ெசய்ய அனுமதிக்க வேண்டும் என்று யாகோபாய பிரிவினர் கூறினர். அதை ஏற்க ஆர்தடாக்ஸ் சபையினர் மறுத்து விட்டனர். இந்நிலையில் ஆர்த்தடாக்ஸ் சபை சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின் போது, உயர் நீதிமன்றம் கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த விசாரணையின் போது நீதிபதிகள் கூறியவை… சாமானியர்கள் கேட்டுக் கொண்டிருந்த கேள்விகளே… உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் கேரள அரசு இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த ஆயிரக்கணக்கான போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, பிறவம் சர்ச் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசின் இந்த செயல்பாடுகள் சாதாரண மக்களுக்கு புரியாது. பிறவம் சர்ச் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் சமரச பேச்சுவார்த்தை நடத்தும் அரசு, சபரிமலை பிரச்னையை தீர்க்க ஏன் இதே போன்ற முயற்சிகளை எடுக்கவில்லை.
அரசின் நிலைப்பாட்டை அமல்படுத்த நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம். பிறவம் சர்ச் விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தையை கைவிட்டு உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவைத் தெரிவித்தாலும், மக்கள் கருத்து என்னவோ அதுவாகாத்தான் இருந்தது.
அது, கேரள அரசு ஹிந்துவிரோத, கிறிஸ்துவ சர்ச்களின் கைக்கூலி என்பதும், உண்மை கம்யூனிஸவாதிகளாக கேரள கம்யூனிஸ்ட்கள் இருந்திருந்தால், இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவம் என்ற மதங்களுக்கு ஒத்து ஊதிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும், இதன்மூலம், கேரள கம்யூனிஸ்ட்கள் உண்மையான கம்யூனிஸ்ட்கள் இல்லை, அவர்கள் கிறிஸ்துவ ஏஜெண்ட்களாக செயல்படும் வியாபார இடைத்தரகர்களே என்றும் தெளிவாக்கியிருக்கிறார்கள்!