திமுக., கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறும் என்று கூறப்படும் நிலையில், திமுக., விடுதலைச் சிறுத்தைகளுக்கு இரு தொகுதிகளை ஒதுக்கக் கூடும் என்றும், சிதம்பரம், புதுவை ஆகியவை விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப் படலாம் என்றும் கூறப்படுகிறது. சிதம்பரத்தில் திருமாவளவனும், புதுவையில் ரவிக்குமாரும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர்.
அண்மையில் திருச்சியில் கூட்டிய விடுதலைச் சிறுத்தைகளின் கூட்டத்தைக் கண்டு ஸ்டாலின் ஆச்சரியப் பட்டதாகவும், அதற்கு பரிசாக இரு தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகள் பெறக் கூடும் என்றும் பேச்சுகள் அடிபடுகின்றன. அதே நேரம், மதிமுக.,வை ஸ்டாலின் ஓரங்கட்டி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
அண்மையில் துரை.முருகன் கூறியதன் வெளிப்பாடாக, தோழமைக் கட்சிகளாகவே மதிமுக.,வும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளும் கருதப் பட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகளின் திருச்சி கூட்டத்தில் கலந்துகொண்டார் ஸ்டாலின். இதை அடுத்து, கூட்டணிக்கான இருக்கையை திருமாவளவன் உறுதிப் படுத்தியுள்ளதாக பேச்சு எழுந்தது.
இந்நிலையில், திருமாவளவன் இன்று சிதம்பரத்துக்கு வந்திருந்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகக்குழு ஆலோசனைக் கூட்டம் வரும் பிப்.4-ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. அந்தக் கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே கூட்டணி குறித்து முடிவு செய்வோம்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்வேன். அவ்வாறு போட்டியிட்டால் மோதிரம் சின்னத்தில் போட்டியிடுவேன் என்று கூறினார் திருமாவளவன்.
இதனிடையே வைகோ.,வுக்கு இந்தக் கூட்டணியில் உரிய முக்கியத்துவம் கிடைக்காது என்றும், அப்படியே கூட்டணியில் சேர்த்தாலும் வைகோ.,வை சீண்டிப் பார்க்கும் விதத்தில் குறைந்தபட்ச தொகுதிகளே மதிமுக.,வுக்கு ஒதுக்கப் படக் கூடும் என்றும் திமுக.,வினர் மத்தியில் பேச்சுகள் எழுந்துள்ளன.