வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் மோதிரம் சின்னத்தில் போட்டியிடுவேன் என்று திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று சிதம்பரத்துக்கு வந்திருந்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகக்குழு ஆலோசனைக் கூட்டம் வரும் 4-ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. அந்தக் கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே கூட்டணி குறித்து முடிவு செய்வோம்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்வேன். அவ்வாறு போட்டியிட்டால் மோதிரம் சின்னத்தில் போட்டியிடுவேன் என்று கூறினார் திருமாவளவம்.
மேலும், கல்விக்காகவும், ஆன்மிகத்திற்காகவும், பாடுபட்ட சுவாமி சகஜானந்தாவின் பிறந்த நாளை தமிழக அரசு, ‘அரசு விழா’வாக அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
திமுக., கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறும் என்று கூறப்படும் நிலையில், திமுக., விடுதலைச் சிறுத்தைகளுக்கு இரு தொகுதிகளை ஒதுக்கக் கூடும் என்றும், சிதம்பரம், புதுவை ஆகியவை விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப் படலாம் என்றும் கூறப்படுகிறது. சிதம்பரத்தில் திருமாவளவனும், புதுவையில் ரவிக்குமாரும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர்.