தமிழக முதல்வர் பழனிசாமியை ‘மேஸ்திரி’ என விமர்சனம் செய்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் சீமான்!
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேஸ்திரி போல் செயல்படுகிறார் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் விமர்சித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ள பலரும், சீமான், சித்தாளுக்குக் கூட லாயக்கில்லாத உதவாக்கரை என்று கூறியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ராமதேவன்பட்டியில் சீமானின் மாமனாரும், முன்னாள் சபாநாயகருமான காளிமுத்து நினைவிடத்தில் சீமான் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசியபோது… ”மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேஸ்திரி போல் செயல்படுகிறார்! இந்தியாவை ஆண்ட வெள்ளைக்கார ஆட்சியில் கூட தேசிய மொழிகளுக்கு அங்கீகாரம் கொடுத்தனர். ஆனால் மோடி ஆட்சியில் இந்திக்கு மட்டும் தான் முக்கியத்துவம் தருகிறார்.
இறந்து போன சமஸ்கிருத மொழியை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் தருகின்றனர். செத்துப் போய்க் கொண்டிருக்கும் தமிழ் மொழியை வளர்ப்பதற்கு நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். மேலும் தி.மு.கவில் வாரிசு அரசியல் இல்லையென்றால் தான் வியப்பு. திமுக.,வுக்குள் யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என்பதற்காக தான் வாரிசுகளுக்கு கட்சிப் பதவி கொடுக்கின்றனர்” என்று கூறினார்.