கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டும் கொடுக்கும் என்று கிராமப்புறங்களில் பேசப்படுவதுண்டு. இந்த பழமொழிக்கேற்ப கேரளாவில் கோவில் பணியாளரை பணமழையால் நனைத்த லாட்டரி பரி’சு.
கேரளாவில் உள்ள தளிபரம்பு பகுதியைச் சேர்ந்த கோவில் பணியாளா் அஜிதன் (வயது 61) என்பவருக்கு அடுத்தடுத்து அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
அஜிதனுக்கு கேரள அரசு நடத்தும் லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருந்து வந்தது. அப்படி எடுத்த லாட்டரி சீட்டில் கடந்த 2011-ம் ஆண்டு இவருக்கு ரூ.40 லட்சம் பணமும், 50 பவுன் நகையும் பரிசாக கிடைத்தது.
கேரள லாட்டரி மூலம் கிடைத்த பரிசு பணம் மூலம் குடும்பத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்ற அஜிதன், அதன் பிறகும் கோவில் ஊழியர் வேலையை விடவில்லை. தொடர்ந்து பணியாற்றி வந்த அவர், லாட்டரி சீட்டு எடுக்கும் பழக்கத்தையும் நிறுத்தவில்லை.
இந்நிலையில் கேரள லாட்டரி நடத்திய மழைக்கால லாட்டரி குலுக்கலில் அஜிதனுக்கு முதல் பரிசான ரூ.5 கோடி கிடைத்துள்ளது.
கேரள லாட்டரியில் 2011-ல் பரிசு பெற்ற அஜிதனுக்கு அடுத்த 8 ஆண்டில் மீண்டும் அதிர்ஷ்டம் அடித்து அவர், கோடீஸ்வரர் ஆகி உள்ளார்.
அஜிதனுக்கு சவிதா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
மகன் அதுல் சவுதி அரேபியாவில் என்ஜினீயராக உள்ளார். மகள் அஞ்சனா பி.டெக். படித்து வருகிறார்.
கேரளாவில் இதுதான் இப்போது டிரன்டிங்காகி வருகிறது.