நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் வீற்றிருக்கும் தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதர் சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய தைப்பூசத் திருவிழா, நாளை 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் இன்று காலை 9 மணிக்கு துவங்கியது இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
தைப்பூச திருவிழாவின் முக்கிய நாளான 9ஆம் நாள் திருவிழா இன்று காலை திருத்தேர் வடம் பிடித்து இழுத்தலுடன் சிறப்பாக நடைபெற்றது! காலையிலேயே பெருந்திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்திழுக்க ஆர்வத்துடன் காத்திருந்தனர். முதலில் கோ ரதத்தில் விநாயகர் மற்றும் முருகப் பெருமான் எழுந்தருள, தொடர்ந்து பெரிய தேரில் சிவ பெருமானும் அடுத்த தேரில் அம்பாளும் எழுந்தருள, மூன்று தேர்களும் வடம் பிடித்து இழுக்கப் பட்டன. பக்தர்கள் பெருமளவில் கூடி, திருத்தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் செங்கோட்டை நகர்வாழ் அன்பர்களும், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். குறிப்பாக, பெண்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும், கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள், சுசீந்திரம் பிரிவைச் சேர்ந்த திருக்கோயில் இது. இந்த தைப்பூச விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) மு.ரத்தினவேலு, ஸ்ரீகாரியம் சு.கெங்கமுத்து மற்றும் உள்ளிட்டோர் செய்திருந்தனர்
கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச திருவிழா நாளை ஆராட்டு நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது.
தைப்பூசத் திருவிழாவின் பத்து நாள்களிலும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா கண்டனர். ஏக சிம்மாசனம் கற்பக விருட்சம் காமதேனு வாகனம் பூதம் சிங்கவாகனம் பூங்கோயில் வாகனம் பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் தினந்தோறும் சுவாமியும் அம்பாளும் திருவீதி உலா கண்டனர்
நாளை சுவாமி அம்பாள் ஆராட்டுக்காக பல்லக்கில் எழுந்தருளலுடன் தைப்பூச உற்சவம் நிறைவு பெறுகிறது.