உலகக் கோப்பை போட்டிகளில் நேற்று மான்செஸ்டர் ஓல்ட் ட்ரஃபோர்ட் நகரில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 325 ரன் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான மார்க்ரம் 34 ரன்னும் டி கோக் 52 ரன்னும் எடுத்து நல்ல அடித்தளம் இட்டனர். பின்னர் வந்த டு பிளஸிஸ் 100 ரன்னும், டுஸென் 95 ரன்னும் எடுத்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 325 ரன்கள் எடுக்க முடிந்தது.
தொடர்ந்து 326 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் வார்னர் 55 ரன் எடுத்தார். ஆரூன் பின்ச், கவாஜா, ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர். ஸ்டொய்னிஸ் 22 ரன்னும், மேக்ஸ்வெல் 12 ரன்னும் எடுத்தனர். காரே 85 ரன் எடுத்தார். பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 315 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இதை அடுத்து தென்னாப்பிரிக்க அணி 10 ரன்னில் வெற்றி பெற்றது
இதனால் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு வந்தது ஆஸ்திரேலியா. முதலிடத்துக்கு இந்திய அணி முன்னேறியது.
உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டிகள் விவரம்
வரும் 9ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி, நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.
11ஆம் தேதி நடைபெறும் 2-வது அரையிறுதி போட்டியில் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா – மூன்றாவது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
கடந்த 2008ல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் அரையிறுதியில் மோதின.
2008 யு-19 அரையிறுதியில்… முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழந்து 205 ரன் எடுத்தது. பின்னர் இந்திய அணி, 43 ஓவரில் 191 ரன் என்ற இலக்கைக் கொண்டு ஆடத் தொடங்கி, 41.3 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் நியூஸிலாந்து கேப்டர் வில்லியம்ஸன் 80 பந்துகளில் 37 ரன் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் அடங்கும். அதே நேரம் இந்திய கேப்டன் விராட் கோலி, 53 பந்துகளில் 43 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகள் அடங்கும்.
2008ல், யு-19 உலகக் கோப்பையில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த முறை, சுமார் 11 ஆண்டுகளுக்குப் பின்னர், உலகக் கோப்பை போட்டியில் அதே இருவர் தலைமையிலான இரு அணிகளும் அரையிறுதியில் மோதுகின்றன என்பது ஆச்சரியப் பட வைக்கும் செய்தி. இதில் இந்திய அணி வென்று, அதே சாதனையை கோலி படைப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.