உத்திரமேரூரைச் சேர்ந்த பத்மாவதியின் மகள் திவ்யா. பிறவியிலேயே மாற்றுதிறனாளி. பத்மாவதி கணவனால் கைவிடப்பட்டவர். ஆனால் தளறாத உறுதியுடன் மகளை 12 ம் வகுப்பு வரை படிக்க வைத்திருக்கிறார். திவ்யாவால் நடக்க முடியாது என்பதால் தினந்தோறும் மகளைப் பள்ளிக்கு தூக்கிக் கொண்டு வருவார் பத்மாவதி.
அதன்பிறகு பள்ளியிலேயே இருந்து மகளுக்குத் தேவையான உதவிகளை செய்வார். மாலை பள்ளி விட்டதும் மறுபடி மகளைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு போவார். இப்படி 12 ஆண்டுகாலம் மகளை சுமந்து நடந்த தாய்க்கு உத்திரமேரூர் நீதிமன்றம் உதவிக்கரம் நீட்டி இருக்கிறது.
பேட்டரியால் இயங்கும், பின்புறம் இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய ஸ்கூட்டரை திவ்யாவுக்கு வழங்கி இருக்கிறது உத்திரமேரூர் நீதிமன்றம்.
நீதிபதியும்,வட்ட சட்டப்பணிகள் குழுத்தலைவருமான நீதிபதி வி.இருதயராணி உத்திரமேரூர் வழக்கறிஞர்கள் சங்கம்,நீதிமன்ற ஊழியர்கள்,உத்திரமேரூர் பெருநகர காவல் நிலைய ஆய்வாளர்கள், மற்றும் உள்ளூர் வணிகர்கள் சிலர் சேர்ந்து இந்த நற்செயலை செய்திருக்கிறார்கள்.
ஸ்கூட்டருடன் ஒன்றரை பவுன் தங்க நகை,சமையல் பொருட்கள் உட்பட ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள உதவிகளை வழங்கி உள்ளனர். இந்த விழாவில் நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.