நாங்க இந்தியாவின் கூ ஆப்க்கு மாறிட்டோம்.. அப்ப நீங்க? என்ற ரீதியில் நைஜீரிய அரசு டிவிட்டர் தளத்தை முடக்கிவிட்டு, இந்தியாவின் கூ செயலியில் அதிகார பூர்வ கணக்கைத் தொடங்கியுள்ளது.
டிவிட்டர் சமூக வலைதளத்தை தடை செய்த கையுடன், அதற்கு மாற்றான வகையில் இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ‘கூ’ செயலியில், ஆப்ரிக்க நாடான நைஜீரியா, அரசு சார்பில் அதிகாரபூர்வ கணக்கைத் தொடங்கி, இனி அரசு அறிவிப்புகள் அதன் மூலம் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது.
நைஜீரிய அதிபர் முகமது புஹாரி அந்நாட்டின் பிரிவினைவாத அமைப்புகளுக்கு எதிராக, டிவிட்டரில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். ஆனால் அதை அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. இதனால் கோபம் அடைந்த முகமது புகாரி, டிவிட்டரை அந்நாட்டிலேயே புழங்க இயலாதபடி தடை செய்தார்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ‘கூ’ செயலியின் பயன்பாடு நைஜீரியாவில் அதிகரிக்கத் தொடங்கியது. அந்த செயலியில் நைஜீரிய அரசு சார்பில் அதிகாரபூர்வமாக கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
இதனை கூ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அப்ரமேயா ராதாகிருஷ்ணா தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில்…
நைஜீரிய அரசின் அதிகாரபூர்வ கணக்கு தொடங்கப்பட்டுள்ளது வரவேற்கிறோம். இந்தியாவுக்கு வெளியிலும் சிறகை விரித்து கூஇந்தியா பறக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், நைஜீரிய அரசின் சார்பில் எங்கள் செயலியில் அதிகாரபூர்வ கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. நைஜீரிய உள்நாட்டு மொழியிலும் இந்த செயலியை பயன்படுத்தும் வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத் திருத்தத்தில் கூறியுள்ள அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றியுள்ளோம். பல மொழிகளிலும் எங்கள் செயலியை பயன்படுத்தலாம். அதிக வசதிகளை ஏற்படுத்த தயாராக உள்ளோம்.. என்று குறிப்பிட்டிருக்கிறார்.