இந்த ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணத்தில் வசித்து வரும் தமிழர்களுக்கும், உலகெங்கிலும் வசிக்கும் தமிழர்களுக்கும் அவர்களின் மொழி, கலாசார, பண்பாட்டுக்கு கௌரவம் சேர்க்கும் விதமாக இதனை அறிவித்துள்ளதாக அவர் காணொளிப் பதிவு ஒன்றில் தெரிவித்திருந்தார்.
வடக்கு கரோலினா தமிழ்ச் சங்கம் தமிழ்ப் பண்பாடு, தை மாதம், பொங்கல் விழா, உலகின் மிகப் பழைமையான தமிழ் மொழி, இன்றளவும், எழுதவும் படிக்கவும் பேசவும் படுகின்ற மிகப் பழைய மொழி போன்ற விவரங்களைக் குறிப்பிட்டு, ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவிக்கக் கோரி கடிதம் அளித்தனர். இந்தக் கோரிக்கையை பரிசீலித்த வடக்கு கரோலினா மாகாண ஆளுநர் ராய் கூப்பர், இந்த ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவித்து ஆணை வெளியிட்டார்.
ராய் கூப்பர் வெளியிட்ட அறிவிப்பில், வடக்கு கரோலினா மாகாண வளர்ச்சிக்கு தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளனர் என்று கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், உலகில் இன்னும் எழுத்து, பேச்சு என பயன்பாட்டில் இருக்கும் மிகப் பழைமையான மொழி தமிழ். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழர்களின் மொழியாகத் திகழும் தமிழ் மொழி இன்னமும் உயிர்ப்புடனும் கலாசார செழுமையுடனும் உள்ளது. வடக்கு கரோலினாவில் வசிக்கும் தமிழர்கள் சிறப்பு மிக்க தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்து வளர்த்துள்ளனர். தமிழர்களோடு இணைந்து அந்தப் பண்பாட்டின் நிகழ்வான தைப் பொங்கலை கொண்டாடுவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார் ராய் கூப்பர்.