தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி காரணமாக, இன்று அவசரமாக கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்! இதில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் இயற்றப்படும் என்று தெரிகிறது.
நாட்டை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு குறித்து ஆலோசனை நடத்த அதிபர் சிறீசேன தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இலங்கையில் அவசரநிலையை பிரகடனம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
நேற்று நள்ளிரவு முதல் அவசரநிலை அமலுக்கு வந்தது. இந்தச் சூழ்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் இன்று அவசரமாகக் கூடுகிறது. குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக இலங்கை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் நாடாளு மன்றத்தில் பேச உள்ளனர்.
இந்நிலையில், தொடர் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு குழு ஒன்றை சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர் போல் அனுப்புகிறது. குண்டு வெடிப்பு நடைபெற்ற இடங்களை ஆய்வு செய்தல், வெடிகுண்டுகளை ஆய்வு செய்தல், பயங்கரவாத தடுப்பு, பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுதல் ஆகியவற்றில் சிறப்புத் திறன் பெற்றவர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றிருப்பார்கள்.
இதனிடையே உளவுத் தகவல்கள் அதிபர் மைத்ரீபால சிறீசேனவுக்கு தெரிவிக்கப்பட்டும், உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதே இந்தத் தாக்குதல் நிகழக் காரணம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியிருந்தார். அரசியல் ரீதியாக கிறிஸ்துவ பின்னணி கொண்ட நபர் என்பதால் அவரது குற்றச்சாட்டு இலங்கை அரசியல் களத்தில் பெரிதாக பேசப்பட்டது. மேலும், அதிபருக்கும் பிரதமருக்கும் நிகழும் நிழல் யுத்தத்தின் ஒரு பகுதியாகவே இந்தக் குற்றச்சாட்டுகளை இலங்கை மக்கள் கண்டனர்.
மேலும் இந்த சதிச் செயலில், இஸ்லாமிய அடைப்படைவாத அமைப்புகள், சீனா, முன்னாள் அதிபர் ராஜபட்ச என முக்கூட்டு தொடர்புகள் இருக்கக் கூடும் என இலங்கையின் செய்தி நிறுவனங்கள் சில செய்திகளை வெளியிட்டன.
முன்னதாக, இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் அதிபர் சிறீசேன அவசர நிலையைப் பிரகடனம் செய்தார். குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை அமைத்து, இரு வாரங்களில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதனால், கொழும்பு நகரில் இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்!.