சமூக வலைதளங்களில் குறிப்பாக பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட கருத்துகள் பகிரப்படும் சமூக ஊடகங்களில் தனிநபர் குறித்த, இனம் மொழி சார்ந்த வெறுப்புணர்வு கருத்துகள் பரப்பப் படுவதை தடுக்க பேச்சு நடத்த வேண்டும் என்று ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான கருத்துகள் பகிரப்படுவதை தடுப்பது தொடர்பாக ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்த தொடர்புடைய சமூக வலைதள நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. சபையில் அண்மையில் அதிகாரப்பூர்வமற்ற முறையிலான ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில், யூத எதிர்ப்பு, இனவெறி, வெறுப்பு உணர்வு உள்ளிட்ட தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ஐ.நா.வுக்கான இந்திய துணைத் தூதர் கே.நாகராஜ் நாயுடு பேசிய போது…
சகிப்பின்மை, வெறுப்புணர்வு, யூத எதிர்ப்பு ஆகியவற்றை இந்தியா கவலையுடன் நோக்குகிறது. சமூக வலைதளங்களில் சக மனிதர்கள் மீதான வெறுப்புணர்வு சார்ந்த கருத்துகள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. சிலர் இத்தகைய கருத்துகளால் கவரப்பட்டு வன்முறைக்குத் தூண்டப்படுகின்றனர்.
சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு பயங்கரவாத இயக்கங்களுக்கு சேர்க்கப் படுகின்றனர்.
இவ்வாறு வெறுப்பு உணர்வுக் கருத்துகள் பகிரப் படுவதைத் தடுக்க சமூக வலைதளங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினருடன் ஆலோசனை நடத்தப்பட வேண்டும்.
மேலும், இதுபோன்ற வெறுப்பு உணர்வுக் கருத்துகள் பகிரப்படாமல் தடுக்க விதிமுறைகளை சமூக வலைதள நிறுவனங்கள் வகுக்க வேண்டும்.
யூதர்கள் இரு நூற்றாண்டுகளாக வெறுப்பு உணர்வுக்கு ஆளாகி, உலகம் முழுவதும் புறக்கணிக்கப் படுகின்றனர். யூதர்களுடன் கலாசார ரீதியாக இந்தியாவுக்கு தொடர்புள்ளது. யூதர்களுக்கு எதிரான புறக்கணிப்பு இந்தியாவில் மிகவும் குறைவு.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு முதல் முறையாக யூத இனத்தவர் வந்துள்ளனர். அப்போது முதல் இந்தியாவுக்கு அவர்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
தற்போது டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வு பகிரப்படுவதை கட்டுப்படுத்த ஐ.நா. அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்!