ப.சிதம்பரம் விவகாரத்தை அடக்கி வாசிக்கச் சொல்லி உத்தரவு போட்டிருக்கிறது திமுக., தலைமை என்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தில்!அதற்குக் காரணம், ப.சிதம்பரத்தின் வெகுநாள் நிலுவை வழக்குகள் இப்போதுதான் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
கடந்த ஆட்சியில் மோடி ரொம்பவே சாதுவாக பல்வேறு விவகாரங் களையும் தயங்கித் தயங்கி அணுகிவந்தார். அப்போது 2ஜி வழக்கு குறித்து சிபிஐ., நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்துக்கு அணுக்கமானவராகக் கூறப் படும் நீதிபதி ஓ.பி.சைனி, வேறு விதமாக தீர்ப்பு அளித்து 2ஜி வழக்கில் இருந்து அனைவரும் வெளியே வரக் காரணமாயிருந்தார். அதற்கு அவர் கூறிய காரணம், ஆதாரத்துக்காக தாம் காத்திருந்ததாகவும், சிபிஐ., தரப்பில் அது தாக்கல் செய்யப் படவில்லை என்பதும்தான்!
ஆனால் அப்போது சிபிஐ தங்கள் கைப்பாவையாக இருந்தது என்பதை, சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஒப்புக்கொண்டுள்ளார். காங்கிரஸ் சிபிஐயை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தவறாக வழிநடத்தியது என்று உண்மையைப் போட்டுடைத்தார்.
இப்போது சிபிஐ., காங்கிரஸின் கட்டுப் பாட்டில் இருந்து விடுபட்டு, சிறகடிப்பது போல் தெரிகிறது. அதன் விளைவே ப.சிதம்பரத்தின் கைது என்கிறார்கள் தில்லி வட்டாரங்களில்.
என்ன ஆனாலும் பரவாயில்லை… நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடுத்த தைரியம் தான் சிபிஐ.,யின் இந்த துணிச்சலான செயல்பாட்டுக்குக் காரணம் என்கிறார்கள்.
இல்லாவிட்டால், ப.சிதம்பரம் போன்ற நபர்களை அவ்வளவு எளிதில் சிபிஐ., நெருங்க முடியுமா என்று கேள்வி எழுப்பும் தில்லி வட்டாரங்கள், அடுத்த இலக்கு, 2ஜி ஊழலில் சிக்கி சிறையில் இருந்த திமுக., எம்பி.,க்கள்தான் என்கிறார்கள். ஆ.ராசா, கனிமொழி என ஒரு பட்டியல் மீண்டும் தயாராகி இருக்கிறது.
2ஜி ஊழல் குறித்து பெருமளவில் பிரசாரம் செய்து, அது நீர்த்துப் போய் எல்லாம் வெத்துவேட்டு என்ற அவப்பெயரைச் சுமக்க பாஜக., தயாராக இல்லை என்பதும், இந்த விவகாரத்தில் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி முனைப்பு காட்டுவதும் தற்போது திமுக., தரப்புக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாகவே திமுக., சில நடவடிக்கைகளை மாற்றி மாற்றி எடுத்து, தடுமாறி வருகிறது. கருப்பு பலூன் விட்டு, தேவையற்ற விதத்தில் போராட்டம் என்ற பெயரில் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரை உசுப்பி விட்டு வேடிக்கை பார்த்திருக்கிறோம் என்று பேசிக் கொள்கின்றனர் திமுக.,வில்!
அடுத்து இலக்கு திமுக எம்பிக்கள் தான் என்ற அச்சத்தாலேயே, காஷ்மீர் 370 சட்டப் பிரிவு ஆகியவற்றில் ஸ்டாலின் இவ்வாறு செயல்பட்டுள்ளதாக தில்லி வட்டாரங்களில் பேசப் படுகிறது.
திமுக கூட்டணியில் எம்.பி.க்கள் 6 பேர்… கட்டம் கட்டப் பட்டிருக்கிறார்கள். இதனால் தான் சிதம்பரம் விவகாரத்தில் டிவி.,க்களில் கூட திமுக., சார்பில் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசும் படி ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார் என்கிறார்கள்.
சிதம்பரம் கைதுக்கு திமுக., கண்டனம் தெரிவிக்கவில்லை. கராத்தே தியாகராஜன் கேள்வி கேட்க பின்னரே ஸ்டாலின் ஒப்புக்கு ஒரு கண்டனத்தை பதிவு செய்தாராம்.
சிதம்பரத்தைப் போல், கார்த்தி சிதம்பரமும் பெரும் சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருக்கிறார். ஊடக பேட்டிகளில், யதார்த்தம் என்ற பெயரில் சேம் சைட் கோல் அடித்து வருகிறார். இதனால் கார்த்தி சிதம்பரத்துக்கு வக்காலத்து வாங்கினால், திமுக.,வுக்கு மேலும் சிக்கல்தான்!
இந்நிலையில், திமுக எம்பிக்கள் கூட்டம் வரும் 29 ஆம் தேதி நடைபெறும் போது, ஸ்டாலினின் மன நிலை குறித்து தெரியவரும்.