நாட்டில் பெரும்பாலானவர்கள், சுங்கச்சாவடிகளில் பணம் கொடுக்காமல் தப்பிப்பதற்கும் போக்குவரத்து போலீஸாரால் அபராதம் விதிக்கப் படும் போது அல்லது பிடிபடும் போது தப்பிப் பதற்கும், தங்கள் வாகனங்களில் போலீஸ், பிரஸ், எம்.எல்.ஏ., ஜட்ஜ் என்றெல்லாம் ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டு, டபாய்ப்பார்கள். ஆனால், ஹைதராபாத் இளைஞர் ஒருவர் செய்துள்ள செயல், போலீஸ்காரர்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்திவிட்டிருக்கிறது.
அந்தக் காரின் நம்பர் பிளேட்டில் எழுதப் பட்டிருந்தது – ஏபி சிஎம் ஜெகன்.
கார் நம்பர் பிளேட் மீது, நம்பருக்கு பதில் சிஎம் ஜெகன் என்று எழுதிக் கொண்டு வலம் வந்து கொண்டிருந்த இளைஞனை ஹைதராபாத் ஜீடிமெட்ல டிராபிக் போலீசார் பிடித்து வழக்குப்பதிவு செய்தனர்.
ஜீடிமெட்ல பைப்லைன் சாலையில் கடந்த 19ஆம் தேதி ட்ராபிக் சிஐ சத்தியநாராயணா தலைமையில் வாகன சோதனை நடந்தது. அதே நேரத்தில் அந்தப் பக்கம் வந்த ஒரு காரை நிறுத்திய காவலர், பேச்சு மூச்சற்று வாயடைத்துப் போய் நின்றார். காரணம், கார் நம்பர் பிளேட்டுக்கு பதில் ஏபிசிஎம் ஐகன் என்று எழுதப் பட்டிருந்தது.
கார் ஓட்டி வந்தவரைப் பிடித்து, ஏன் என்று கேட்டபோது டோல்கேட்டில் பணம் கட்டாமல் தப்பிப்பதற்காக அவ்வாறு செய்ததாகக் கூறினார். அவர், காரின் சொந்தக்கார இளைஞன் முப்பிடி ஹரி ராகேஷ் தெரியவந்தது.
இதை அடுத்து காரை கைப்பற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பியதாக டிராபிக் சிஐ தெரிவித்தார். கார் ஓட்டி வந்த இளைஞன் கிழக்கு கோதாவரி மாவட்டம் பிட்டாபுரத்தைச் சேர்ந்தவனாகத் தெரிகிறது.