மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது இரண்டாம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கடந்த முறை சிகப்புப் பட்டுத் துணி சுற்றப் பட்ட பொட்டலமாகக் கொண்டு வந்து காட்சிக்கு இனிமை சேர்த்தார்.
2020 – 2021 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்று காலை 11 மணி அளவில் மத்திய நிதி நிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டுக்காக பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்தி, நிபுணர்களுடன் ஆலோசித்தார். நிர்மலா சீதாராமனும் கடந்த ஓரிரு மாதங்களாக முக்கிய தொழிலதிபர்கள், பொருளாதார நிபுணர்கள், முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பலருடனும் ஆலோசனை நடத்தினார். சரிந்து வரும் ஜிஎஸ்டி வருவாய் வசூல், பொருளாதார பின்னடைவு, வேலைவாய்ப்பின்மை, தொழில்துறை பின்னடைவு என சர்வதேச அளவில் சரிந்துவரும் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு இடையே நாட்டின் பிரச்னைகளைக் கையாண்டு தாக்குப்பிடிக்க வேண்டிய வழிகளை பலரும் ஆலோசனைகளாகக் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட், வருவாய் பற்றாக்குறைகளை கட்டுக்குள் கொண்டு வந்து பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.