சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
38. செலவுக்கு பின் வாங்கக் கூடாத சந்தர்ப்பங்கள்.
செய்யுள்:
க்ரதௌ விவாஹே வ்யசனே ரிபுக்ஷயே யஸஸ்கரே கர்மணி மித்ரசங்க்ரஹே|
ப்ரியாசு நாரீஷ்வதனேஷு பாந்தவே ஷ்வதிவ்யயோ நாஸ்தி நராதிபாஷ்டசு ||
— ஹிதோபதேசம்.
பொருள்:
ஓ அரசனே! யக்ஞம் போன்ற கிரியைகளைச் செய்யும் போது, விவாகச் செயல்களின் போது, ஏதாவது ஆபத்து நேரும்போது, எதிரிகளை வதைக்கும்போது (பாதுகாப்புச் செலவு), புகழை சம்பாதித்துக் கொடுக்கும் பணிகளுக்காக, நண்பர்களை சம்பாதித்துக் கொள்வதற்காக, மனைவிக்கு பரிசு வாங்கும்போது, கஷ்டத்தில் இருக்கும் உறவினர்களுக்கு ஆதரவளிக்கும் போது – என்ற இந்த எட்டுவகைப் பணிகளில் செய்த செலவுகளை அனாவசிய செலவாக எண்ணக்கூடாது.
விளக்கம்:
எட்டுவித சந்தர்ப்பங்களில் செலவு பற்றி சிந்தித்து கருமித்தனம் பண்ணாமல் தாராளமாக செலவு செய்ய வேண்டும். அது தவறல்ல என்கிறார் ரிஷி இந்தப் ஹிதோபதேசத்தில்.
இவ்வுலகிலும் மறு உலகிலும் லாபம் பெறுவதற்கு இதனைச் சிறந்த முதலீடாகக் கூறுகிறது இந்த ஹிதோபதேசம்.
சாதாரணமாக அதிக செலவு செய்பவர்களை ஆடம்பரச் செலவு செய்பவராக குடும்பத்தினர் நிந்திப்பர். ஆனால் மேலே சொன்ன எட்டு விஷயங்களுக்கு செலவு செய்பவரை அவ்வாறு கூறக் கூடாது என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.
இந்த எட்டு விதச் செயல்களில் புண்ணியத்தையும் உலக நன்மையையும் அளிக்கும் நிகழ்வுகள் உள்ளன. புகழையும் கீர்த்தியையும் அதிகரிப்பதும், மனதிற்கு திருப்தி அளிப்பதும் சொந்த மனிதர்களை ஆதரிப்பதுமானா சிறந்த குணங்கள் இதில் உள்ளன.
மனிதன் பொருளீட்டுவதன் உத்தேசம் கூட இப்படிப்பட்ட நற்செயல்களுக்காகத் தானே! தானம் செய்யும் இயல்பு ஒரு மனிதனின் சகஜ குணம் என்பதே இதன் உட்பொருள். அதனால் சில சந்தர்ப்பங்களில் செலவு செய்வதற்குப் பின் வாங்க கூடாது. நாட்டின் பாதுகாப்புக்காக ஆகும் செலவு அனாவசிய செலவு என்று எண்ணக்கூடாது.