ஒரு அனாதை சடலத்தை தன் தோள்களில் சுமந்து சென்று அந்திமக் கிரியைகளை கூட நடத்தி மனிதாபிமானத்தை நிரூபித்தார் ஒரு பெண் எஸ்ஐ. அவருடைய மனிதாபிமானத்தை புகழ்ந்து பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள்.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாச -காசிபுக்க முனிசிபாலிடி எல்லையில் அடவி கொத்தூரு கிராம வயலில் அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் ஒன்று கிடந்தது. அதுகுறித்து செய்தி அறிந்த காசிபுக்க எஸ்ஐ சிரீஷா சம்பவ இடத்திற்கு வந்தார். அந்த உடலை எடுத்துச் செல்வதற்கு முன்வரவேண்டும் என்று அங்குள்ளவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
யாரும் முன்வராததால் தானே முன் சென்று வேறு ஒருவரின் உதவியோடு ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தோளில் சுமந்து சென்றார். உள்ளூரில் இருந்த லலிதா சாரிடபிள் டிரஸ்டிடம் உடலை ஒப்படைத்தார். அதன் நிர்வாகத்தினரான சின்னி கிருஷ்ணாவோடு சேர்ந்து தகன கிரியைகளை நடத்தினார் எஸ்ஐ.
இந்த விஷயத்தை அறிந்த தெலங்காணா மாநில போலீசார் எஸ்ஐ கொத்த சிரீஷாவுக்கு பிரத்தியேகமாக பாராட்டுதல்களை தெரிவித்தார்கள்.
அவருடைய சேவைகளைப் புகழ்ந்து சல்யூட் மேடம் என்று ட்வீட் செய்தார்கள். பெண்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டும் என்று கூறும் சமுதாயத்தில், இவர் தேர்ந்தெடுத்த தொழிலுக்கும் உடுத்திய யூனிஃபார்முக்கும் செய்கின்ற பணிக்கும் கர்வமாக சல்யூட் செய்கிறோம் என்று குறிப்பிட்டார்கள்.
தெலங்காணா மாநில போலீசாரின் ட்வீட் குறித்து நெட்டிசன்கள் பெரிய அளவில் பதில் வினையாற்றி உள்ளார்கள். மாநிலங்கள் வேறானாலும் போலீஸ் என்ற தொழில் இரண்டு மாநில போலீசார்களையும் ஒன்றுபடுத்தியுள்ளது என்று பாராட்டியுள்ளார்கள்.