வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில்… வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம். புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வருவோர் தவிர, மற்ற மாநிலங்களில் இருந்து வருவோர்க்கும் இ-பாஸ் கட்டாயம். வணிக ரீதியான பயணமாக தமிழகத்தில் 3 நாட்கள் தங்குவோருக்கு தனிமைப் படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது… என்று கூறப்பட்டுள்ளது.
மீண்டும் ஈ-பாஸ்
கொரோனா தொற்று அதிகரித்திருப்பதால் சர்வதேச பயணிகளுக்கும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களைச் சேர்ந்த பயணிகளுக்கும் இ – பாஸ் கட்டாயம் என தமிழக பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு வரும் எல்லா சர்வதேச பயணிகளும் இ – பாஸ் பெறவேண்டும். அதேபோல, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, புதுச்சேரி தவிர்த்த பிற மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் தமிழகத்திற்கு வர இ- பாஸ் பெற வேண்டும்.
தொழில்ரீதியான பணிகளுக்காக 72 மணி நேரத்திற்குக் குறைவாக தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்திக்கொள்வது கட்டாயமல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.கே., தென்னாப்பிரிக்கா, பிரேசில் நாடுகளில் இருந்து வருபவர்களிடம் கொரோனோ இல்லை என்ற சான்றிதழ் இருந்தால், தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு, இங்கும் பரிசோதனைக்கான மாதிரிகளை அளிக்க வேண்டும். அதற்கு பிறகு அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லலாம். சோதனை முடிவுகளைப் பொறுத்து, பொது சுகாதாரத் துறை தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த பயணிகள், பயணத்தைத் துவங்குவதற்கு முன்பாகவே ஏர் சுவிதா போர்ட்டலில் (newdelhiairport.in) தங்களைப் பற்றிய சுய விளக்கத்தை அளிக்க வேண்டும். கடந்த 14 நாட்களுக்கான பயண விவரங்களையும் தர வேண்டும்.
பயணத்தைத் துவங்குவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனையின் முடிவை கையில் வைத்திருக்க வேண்டும். அதனை ஏர் சுவிதா போர்ட்டலிலும் அப்லோட் செய்திருக்க வேண்டும்.