மளிகை கடை உரிமையாளரை கட்டிப் போட்டு, 50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பி சென்ற மூன்று பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார், 29; சேலம், செவ்வாய்ப்பேட்டையில், ‘யுகம் அன்ட் கோ’ என்ற பெயரில் மளிகை பொருட்கள், சோப்பு, பவுடர் உள்ளிட்ட அழகு சாதன பொருட்களின் மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.
இவரது கடையில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஓம்பிரகாஷ், 25 பணிபுரிந்தார். வியாபாரிகளிடம் வசூலான தொகையை, மோகன்குமார் வீட்டில் வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, குடும்பத்தினர் வெளியே சென்றிருந்த நிலையில், மோகன்குமார் மட்டும் வீட்டில் இருந்தார்.
அப்போது, ஓம்பிரகாஷ் உட்பட மூன்று பேர் வந்து, மோகன்குமாரை சரமாரியாக தாக்கி, கை, கால்களை கட்டிப் போட்டனர்.
பீரோவில் இருந்த 50 லட்சம் ரூபாயை எடுத்து, வீட்டை பூட்டி தப்பினர். கொள்ளை கும்பல், சிறப்பு ரயில் மூலம் ராஜஸ்தானுக்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்குள்ள போலீசாருக்கு, சேலம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்