நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நெசவாளர் காலனியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளியின், 14 வயது மகள், அரசு மேல்நிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார்.மாணவி பள்ளிக்கு தினமும், காலை, மாலை தனியார் பஸ்சில் சென்று வந்தார். மாணவி தினமும் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு காலதாமதமாக வருவதையும், அவ்வாறு வந்தாலும் மொபைல் போனில் அடிக்கடி மிஸ்டுகால் வருவதையும் கண்காணித்து வந்த பெற்றோர், இது குறித்து மகளை கண்டித்ததுடன், எச்சரிக்கையும் விடுத்தனர்.
இந்நிலையில், கடந்த, 22ம் இரவு மாணவி மொபைல் போனில் மிஸ்டு கால் வந்துள்ளது. அதை பார்த்த பெற்றோர், மாணவியை கடுமையாக எச்சரித்துள்ளனர். அதனால், மனமுடைந்த மாணவி, நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்தவர், அன்று மாலை, 6 மணிக்கு, வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
அதை பார்த்த பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவியின் மொபைல் போனுக்கு மீஸ்டு கால் கொடுத்தது யார் என, ஆய்வு செய்தனர்.அப்போது, பிரசாத், ரஜினி, கோகுலகண்ணன், பூலாம்பட்டி அருள், 19, இடைப்பாடி சீனிவாசன், 21, சுரேஷ், 21, ஆகியோர் தொடர்ந்து மாணவிக்கு மிஸ்டு கால் கொடுத்தது தெரியவந்தது.அதை தொடர்ந்து, மாணவியை தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிந்து, அருள், சீனிவாசன், சுரேஷ் ஆகிய, மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற, மூன்று பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.