கேதார்நாத் யாத்திரை கடும் பனிப்பொழிவு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளது. நேற்று இரவு முதல் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், கேதார்நாத் யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளதாக, உத்தராகண்ட் மாநிலம் ருத்ரப்ரயாக் மாவட்ட ஆட்சியர் மங்கேஷ் கில்டியால் கூறியுள்ளார்.
கேதார்நாத் செல்லும் பயணிகள், லிஞ்சவுலி மற்றும் பீம்பலி ஆகிய இடங்களிலேயே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளனர். இந்த யாத்திரையில், முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், மாநிலங்களவை உறுப்பினர் பிரதீப் டம்டா, உள்ளூர் எம்.எல்.ஏ., மனோஜ் ராவத் உள்ளிட்டோரும் காங்கிரஸார் சிலரும் இருந்ததாகவும், அவர்களும் பாதுகாப்பாக தங்க வைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் ஆட்சியர்.
நிலைமை சீரடையும் வரை லிஞ்சவுலி, பீம்பலி உள்ளிட்ட இடங்களில் யாத்ரீகர்கள் பாதுகாப்பாக காத்திருக்க வேண்டும் என்றும் கேதார்நாத் ஆலயத்திலும் மூன்று இன்ச் அளவுக்கு பனி படர்ந்துள்ளதாகவும் ஆட்சியர் கூறியுள்ளார்.
முன்னதாக, கேதார்நாத் ஆலயத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருந்தார். அதன்படி, கேதார்புரி பணிகள் நடைபெறுகிறதா என்று பார்த்து வருவதாக முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான ஹரீஷ் ராவத் தெரிவித்து, ஞாயிற்றுக் கிழமை கேதார்நாத் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆனால், பனிப் பொழிவால் அவர் முன்னமேயே தங்க நேரிட்டுள்ளது.