ரூ. 13.35 லட்சம் மோசடி செய்து தீபாவளி சீட்டு நடத்தி, தலைமறைவானவர் மீது பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே, மொரசப்பட்டியை சேர்ந்தவர் மாது மகன் விஜயகுமார், 39. இவர் சீட்டு நடத்தி வந்துள்ளார். தீபாவளி பண்டிகைக்காக ஆண்டுதோறும் சீட்டு நடத்தி, பணமாகவும், பொருளாகவும் தந்துள்ளார். அதேபோல் இந்த ஆண்டின் தீபாவளிக்காக சீட்டு சேர்த்துள்ளார். வாரந்தோறும் பணம் செலுத்தி, தீபாவளி பண்டிகை சமயத்தில் பணமாக பெற்று குடும்பத்தினருக்காக செலவு செய்து அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்களின் வழக்கமாக உள்ளது.
இதை நம்பி ஏராளமான மக்கள் சீட்டு போட்டுள்ளனர். கடந்த 10 மாதங்களாக பணத்தை வசூல் செய்த விஜயகுமார், தீபாவளி பண்டிகை வர இன்னும் ஒருமாதம் மட்டுமே உள்ள நிலையில் கடந்த 4 நாட்களாக காணாமல் போய் உள்ளார். அதனால் சீட்டு போட்டவர்கள் விஜயகுமாரை தேடியுள்ளனர். அவர் இருக்கும் இடம் தெரியாத நிலையில், சீட்டு போட்ட ஐந்து பேர் பூலாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். புகாரில், 13 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என, கூறியுள்ளனர். பூலாம்பட்டி போலீசார் விஜயகுமாரை வலை வீசி தேடி வருகின்றனர்.