கேரளாவில் பாஜக., சார்பில் சபரிமலை பாதுகாப்பு ரதயாத்திரை 6 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ரத யாத்திரையை கர்நாடக பாஜக., தலைவர் எடியூரப்பா வியாழன் இன்று மதியம் தொடங்கி வைத்தார்.
கேரளத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்யச் செல்லலாம் என்று கூறி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்துக்களின் மத நடைமுறைகளில் அதிகம் தலையிடுவதாகவும், குறிப்பிட்ட இந்து மத கேந்திரத்தின் பாரம்பரியப் பெருமையை அழிக்கும் வகையில் தீர்ப்பு அமைந்திருப்பதாகவும் கூறி, சபரிமலை ஐயப்ப பக்தர்களும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதை அடுத்து, பாஜக., இந்து அமைப்புகளைச் சேர்த்துக் கொண்டு, சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரை ஒன்று நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி, கேரள பாஜக சார்பில் சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரை இன்று தொடங்கியது.
கேரளத்தின் வடக்கு மாவட்டமான காசர்கோடு மாவட்டம் மாதூர் சித்தி விநாயகர் கோவிலில் இருந்து இந்த யாத்திரையை கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தொடங்கி வைத்தார்.
தொடக்க நிகழ்ச்சியில் பேசிய எடியூரப்பா, கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, தேஜ., கூட்டணி ஒருங்கிணைப்பாளர் துஷார் வெல்லாப்பள்ளி ஆகியோர் தலைமையில் நடைபெறும் சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரை, சபரிமலை எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட இடதுசாரி அரசாங்கத்தின் கண்களை திறக்கச் செய்யும்! மக்களின் உணர்வுகளுக்கு பிணரயி விஜயன் அரசு மதிப்பு அளிக்க வேண்டும்” என்று கூறினார்.
இந்த ரத யாத்திரை துவக்க விழாவில் மங்களூர் எம்பி நளின் காட்டீல், பாஜக தேசிய இணை ஒருங்கிணைப்பு செயலாளர் சந்தோஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சபரிமலை ஆசாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி நடைபெறும் இந்த ரத யாத்திரை, வரும் 13ஆம்தேதி சபரிமலை சென்றடைகிறது.