குருவி ஒன்று கூடு கட்டும் காணொளியைப் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் கீழ்க்காணும் பாடல் ஞாபகத்திற்கு வந்தது.
”குருவியிழைத்த புற் கூட்டின் பிணையல்
உருவி அவிழ்க்கையும் ஒல்லார் – கருவின்
அமைத்த பேரூழின் அரும் பிணி வீட்டச்
சமைத்த வலியரோ தாம்”
இந்தப் பாடலானது எம் தந்தையாரின் தமிழ் ஆசிரியரான மதுரை தமிழ்ச்சங்கம் ஸ்ரீமத் உபய வேதாந்த வித்வான் திரு.நா.அப்பனையங்கார் ஸ்வாமி இயற்றியது. இது போலப் பல பாடல்களை அவர் இயற்றியுள்ளார். அனைத்தும் வேத வேதாந்தங்களின் சாரமானது.
இதற்கு எம் தந்தையார் ஸ்ரீ.வி.கே.எஸ்.ஸ்வாமி எழுதிய கருத்துரை –
“மம மாயா துரத்யயா” , “மாமேவயே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்திதே” என்பது கீதை வாக்கியம்.
ஊழ்வினையில் அகப்பட்டவர்கள் அதைத் தாமாகத் தாண்ட முடியாது. என்னை எவனொருவன் கால்கட்டுகிறானோ, அவன் ஊழ்வினையை எளிதில் தாண்டுகிறான் என்னும் கீதைப் பொருளை, பிள்ளை திருநறையூர் அரையர் என்னும் மஹாசார்யர், ஒரு குருவி பிணைத்த பிணை ஒருவரால் அவிழ்க்கப் போகிறதில்லை, ஸர்வ சக்தி கர்மாநுகுணமாகப் பிணைத்த பிணையை அவனையே கால்கட்டி அவிழ்த்துக் கொள்ளும் இத்தனை காண்” என்ற தொடரால் விளக்கியுள்ளார்.
இக்கருத்தையொற்றி அமைந்தது இப்பாடல்
”குருவியிழைத்த புற் கூட்டின் பிணையல்
உருவி அவிழ்க்கையும் ஒல்லார் – கருவின்
அமைத்த பேரூழின் அரும் பிணி வீட்டச்
சமைத்த வலியரோ தாம்”
– ஸ்ரீ. சம்பத்