இந்த வருட ஐபிஎல் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. வழக்கம் போல் சென்னை அணி இந்த முறையும் பைனல்ஸுக்கு வந்துவிட்டது. கொஞ்சம் சுற்றி வந்தாலும் இலக்கை அடைந்துவிட்டது. வழக்கம் போல் ஐபிஎல் நாடகத்தில் ஒரு சிறப்பம்சம் மற்றும் சுவாரஸ்யம், எட்டு அணிகள் கொண்ட ஐபிஎல்.,லில், 7 அணிகள் தங்களுக்குள் விளையாடி யார் முன்னேறுவது என்று கணக்கு போட்டு, கடைசியில், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தல தோனியுடன் மோதுவது யாரு என்று தீர்மானிப்பதற்குத்தான்!
ஐபிஎல் 12 லீக் போட்டிகளின் முடிவில், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ‘ப்ளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதில் மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நடந்த ‘குவாலிபயர்-2’ போட்டியில் சென்னை, தில்லி அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தில்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஐபிஎல், அரங்கில் 10வது ஆண்டில் பங்கேற்கும் சென்னை அணி, 8வது முறையாக ஃபைனலில் முன்னேறியது.
தவிர, ஐபிஎல்., அரங்கில் சென்னை அணி, தனது 100வது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின் ஐபிஎல்., அரங்கில் 100 வெற்றிகளை பெற்ற இரண்டாவது அணி என்ற பெருமை பெற்றது.
தவிர, மும்பை அணியை சென்னை அணி நான்காவது முறையாக ஃபைனலில் எதிர்கொள்கிறது. அதில் சென்னை அணி (2010) ஒரு முறையும், மும்பை அணி (2013, 2015) இரு முறை கோப்பை வென்றுள்ளது. சென்னை அணி 8வது ஃபைனலில் பங்கேற்கிறது. மும்பை அணி 5வது ஃபைனலில் பங்கேற்கிறது. இரு அணிகளும் தலா 3 முறை கோப்பை வென்றுள்ளது .
விசாகப் பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில், தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ‘குவாலிஃபயர்-2’ போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்., அரங்கில் தனது 100வது வெற்றியை பதிவு செய்தது ஒரு சிறப்பான அம்சம்தான்!
இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டு தோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் எனும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி தொடர் நடக்கிறது. இது ஐபிஎல்லின் 12வது தொடர்!
விசாகப் பட்டினம் வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது ஆண்டில் 8வது முறையாக ஃபைனலுக்கு முன்னேறியது. வரும் 12ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கும் ஃபைனலில் சென்னை அணி, மும்பை அணியை எதிர்கொள்கிறது.
கடைசி போட்டி வெற்றி குறித்து தோனி கூறிய போது… ‘கொஞ்சம் சுத்தான பாதையில் சென்றாலும், வழக்கமான பாதையான ஃபைனலுக்கு சென்றதில் மகிழ்ச்சி. இதற்கு பௌலர்கள் தான் முக்கிய காரணம். ஒரு கேப்டனாக என்ன தேவை என்பதை மட்டுமே பௌலர்களிடம் கேட்க முடியும். ஆனால் அதை சிறப்பாக செயல்படுத்துவது பௌலர்கள் தான். அதை சிறப்பாக அவர்கள் செய்தனர்.’ என்று கருத்து தெரிவித்துள்ளார் தோனி.