திருச்சி அருகே உள்ள மணப்பாறை பகுதியில், பெத்தவனே தனது பள்ளிக்கூடம் படிக்கும் மகளை பாலியல் வன்கொடுமை செய்ய, அதை அறிந்து வெகுண்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரில் ஒரு குடும்பமே இப்போது போலீஸின் விசாரணைக்குள் இருக்கிறது.
திருச்சி அருகே மணப்பாறையைச் சேர்ந்த புதுமணியாரம்பட்டியை சேர்ந்த 14 வயதுச் சிறுமி அங்குள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கட்டடத் தொழில் செய்து வரும் அவரின் தந்தை பெயர் ரவிச்சந்திரன். இவருக்கு குடிப்பழக்கம் உண்டாம்.
சம்பவத்தன்று வழக்கம் போல் தன் வீட்டுக்கு குடித்துவிட்டு வந்துள்ளார் ரவிச்சந்திரன்! அப்போது தனியே இருந்த மகளிடம் ரவிச்சந்திரன் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த அந்தச் சிறுமி, கூச்சல் இட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன், சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அழுதுகொண்டே தனது தாயிடம் கூறியுள்ளார் அந்தச் சிறுமி. இதைக் கேட்டு அதிர்ந்த அவர், மகளை தனது தந்தை வீட்டுக்கு அனுப்பியுள்ளார். பின்னர், தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீஸில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில், கணவன் ரவிசந்திரன் மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார்! அதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று கூறி அவரது தாய் மற்றும் சகோதரிகளை வைத்து மிரட்டுகிறார் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.
இதை அடுத்து மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், ரவிசந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், ரவிசந்திரனின் தாய், தந்தை மற்றும் சகோதரிகள் மீது கொலைமிரட்டல் பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.