டாவோஸ்: இந்தியாவில் வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்தால், பொருளாதார வளர்ச்சி குறையும் என்று மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரகுராம் ராஜன் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது…
2019க்குப் பின்னர் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், நான் நிதி அமைச்சர் ஆவேன் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், நான் அரசியல்வாதி இல்லை. இது வெறும் யூகம்தான்.
விவசாயிகளின் பிரச்னையை அரசு தீர்க்க வேண்டும். கடந்த 5 ஆண்டில், குறிப்பிடத் தக்க வகையில் வளர்ச்சி சாத்தியப் பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.
ஜிஎஸ்டி அமலாக்கம் என்பது நேர்மறை நடவடிக்கை. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் விலகியது கவலை தரத்தக்க அம்சம்தான். ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி காக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.
வாராக்கடன் பிரச்னை வங்கிகளின் கழுத்தை நெரிக்கிறது. பொய்யான தொழில்களுக்கு கடன் வழங்கி, அதை உயிர்ப்பித்து வைத்தது பெரும் பிரச்னையானது. வங்கித் துறையில் அரசியல் தலையீட்டை குறைக்க வேண்டும்.
தொழில் துறையினருக்கான சாதகமான சூழல் உருவாக வேண்டும். தனியார் நிறுவனங்கள் வளர்ச்சி பெற தேவையான வழிமுறைகள் தேவை. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை நிர்வகிக்க, மத்திய அமைச்சரவையில் உள்ள மிகச் சிறந்த நபரை நியமிக்க வேண்டும்… என்றார் அவர்.