புது தில்லி: டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் உறுதியாகக் கூறிவிட்டது. தினகரனின் அமமுக., என்பது, அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால், அக்கட்சி கேட்கும் குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தெளிவாகக் கூறிவிட்டது தேர்தல் ஆணையம்!
முன்னதாக சென்னை ஆர்கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப் பட்டது. பெண்களைக் கவரும் வகையில், குக்கரை வைத்தே அரசியல் செய்த தினகரன், அதில் ஆளும் கட்சியை வேகவைத்துவிடுவேன் என்று கூறிக் கொண்டே, வெற்றி பெற்று விட்டார். இதை அடுத்து குக்கர் சின்னம் அவருக்கு ராசி ஆகி விட்டது. குக்கர் விசில் மூஐ முடுக்கெல்லாம் கூவும் என்று சவால் விட்டார்.
இதை அடுத்து, பெண்களைக் கவரும் வகையில் மீண்டும் போட்டியிட இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட அமமுக.,வுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தினகரனின் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், இதற்கு பதிலளிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இதை அடுத்து, தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அமமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால், குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது. தேர்தல் ஆணையத்தில் உள்ள ஒரு பொதுவான சின்னத்தை அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு மட்டுமே ஒதுக்க முடியும். பொதுப்பட்டியலில் உள்ள ஒரு சின்னத்தை தனிப்பட்ட கட்சி உரிமை கோர முடியாது என கூறிவிட்டது.
இதை அடுத்து தினகரனுக்கு நிரந்தரமாக குக்கர் விசில் அடிக்க இயலாமல் போய்விட்டது.