மத்திய இடைக்கால நிதியமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்!
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சிகிச்சைகாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31ஆம் தேதி தொடங்குகிறது. மத்திய இடைக்கால பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை தாக்கல் செய்வதற்காக குறிப்பிட்ட தேதிக்குள் அருண் ஜேட்லி திரும்பிவர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு வசதியாக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நிதித் துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
ஜேட்லி வகித்து வந்த நிதித் துறை மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரங்கள் துறை ஆகியவையும் பியூஷ் கோயலுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரை பேரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளார். எனவே பியூஷ் கோயல் இடைக்கால நிதி அமைச்சராகப் பொறுப்பு ஏற்றார். அருண் ஜேட்லி, இலாகா இல்லாத அமைச்சராக மத்திய அமைச்சரவையில் தொடர்வார். இதனை மத்திய அரசு தெரிவித்துள்ளது.