சென்னை: சென்னையில் தான் மேற்கொண்ட ஓலா கேப் பயணத்தில் கார் ஓட்டுநர் தன்னை பாதி வழியிலேயே இறக்கிவிட்டது குறித்து ட்வீட்டியது சர்ச்சையானதால், தற்போது அதற்கு விளக்கம் கொடுத்து, அதையும் டெலிட் செய்துவிட்டார் நடிகை பார்வதி நாயர்!
சமூக வலைத்தளங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து வெளிப்படையான கருத்துகளைக் கூறி வருகிறார் நடிகை பார்வதி நாயர். இவர் மகளிர் தினத்தன்று நள்ளிரவு சென்னையில் ஓலா கேப்ஸில் பயணித்துள்ளார். அப்போது அவர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ட்வீட்டரில் பதிவு செய்தார். அந்த ட்வீட் வைரலனது.
அதாவது, சென்னை கார் டிரைவர் ஒருவர், பார்வதி நாயரை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாகவும் அதையே டிவீட்டில் அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் செய்திகள் ஊடகங்களில் பரவின. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்வதி நாயர், நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். தனது ட்வீட் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டதாகக் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் 8ஆம் தேதி நள்ளிரவு ஓலாவில் ப்ரைம் காரை புக் செய்தேன். எங்கே இறங்க வேண்டும் என்பதற்கான ஜிபிஎஸ் டிராப் லோகேஷனை சரியாக அழுத்தாததால், கார் டிரைவர் என்னை பாதி வழியில் காரை நிறுத்தி என்னை இறங்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார். இது நான் இறங்க வேண்டிய இடம் இல்லை என கூறியும் அவர் அதனை ஏற்கவில்லை. கஸ்டமர் கேருக்கு புகார் அளித்தும், அவர்களும் கண்டுகொள்ளவில்லை. ஓலா டிரைவரால் எனக்கு எவ்விதமான பாலியல் தொல்லையும் நேரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக நான் பதிவிட்டிருந்த ட்வீட் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், ஓலா நிறுவனத்தின் சார்பில் பார்வதி நாயரை தொடர்பு கொண்டு அவரது புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால், சர்ச்சையை ஏற்படுத்திய தனது ட்வீட்டை நடிகை பார்வதி நாயர் நீக்கியுள்ளார்.