சின்மயி டப்பிங் யூனியனில் புதிதாக உறுப்பினர் ஆகவேண்டும், ரூ. ஒன்றரை லட்சம் கட்ட வேண்டும் என்று டப்பிங் யூனியன் நிர்வாகிகள் அழைப்பை நிராகரித்தார் சின்மயி! தாம் மன்னிப்பு கேட்க வைக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிக் குரல் கொடுக்கும் கலைஞர்களின் பாதுகாப்புக்காக செயல்பட்டு வரும் சங்கம் டப்பிங் யூனியன். இதன் தலைவராக நடிகர் ராதாரவி பொறுப்பு வகித்து வருகிறார். பாடகியும், பின்னணிக் குரல் கலைஞருமான சின்மயி, நாங்கள் வாங்கும் சம்பளத்தில் 10 சதவீத பணத்தை டப்பிங் யூனியன் பெற்றுக் கொள்கிறது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், தமிழ்த் திரைப்பட டப்பிங் யூனியனின் துணைத் தலைவர் வீரமணி, பொருளாளர் ராஜ்கிருஷ்ணா மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது அவர்கள், டப்பிங் கலைஞர்களிடமிருந்து 10 சதவீத சம்பள பணத்தை பெற்றுக் கொள்வது உண்மை. ஆனால் இதில் இன்சார்ஜ் என்று சொல்லக்கூடிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு 5 சதவீதமும் மீதம் உள்ள 5 சதவீதம் சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் செலவிடப்படுகிறது. 10 சதவீத பணத்தையும் முழுமையாக சங்க நிர்வாகமே வைத்துக் கொள்கிறது என்று சின்மயி கூறுவது கண்டனத்துக்கு உரியது என்று கூறினர்.
மேலும், நடிகர் ராதாரவி இல்லை என்றால் இந்த சங்கம் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்காது. டப்பிங் பேசினால் மட்டுமே பணம் என்று இருந்த
நிலையில், டப்பிங் பேசினாலும் பேசவில்லை என்றாலும் ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்தாலே ஊதியம் வழங்க வேண்டும் என்ற நிலையைக் கொண்டு வந்தது ராதாரவி. ஆனால் ராதாரவி பற்றி சின்மயி பேசுவது தவறானது. இந்த சங்கத்தில் இருந்த தேர்தல் அதிகாரிதான் 90 ரூபாய் சந்தா கட்டாததால் சின்மயியை நீக்கினார். ராதாரவி நீக்கவில்லை… என்று கூறிய அவர்கள், சின்மயி ஒன்றரை லட்சம் முன்பணம் கொடுத்து, மன்னிப்பு கடிதம் கொடுத்து புது உறுப்பினர் படிவம் கொடுத்தால் மீண்டும் டப்பிங் யூனியனில் சேர்த்துக் கொள்வோம்’ என்றனர்.
இதற்கு பதிலளித்துள்ள சின்மயி, மீண்டும் தனது டிவிட்டர் பதிவில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதில் ‘தமிழ்நாட்டில் தமிழ் படங்களுக்கு பணிபுரிய வேண்டும் என்றால் மன்னிப்புக் கடிதமும், ரூ.1.5 லட்சம் கொடுக்க வேண்டுமாம். 2006-ம் ஆண்டு முதல் என்னை வைத்து டப்பிங் யூனியன் நிறைய வருவாய் பார்த்தது. ஆனால் நான் இப்போது என் வேலை உரிமைக்காக ரூ.1.5 லட்சம் கட்ட வேண்டுமா? ஒன்று இரண்டு படங்களில் டப்பிங் பேசியவர்கள் கூட யூனியனில் ஆயுள் கால உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 12 ஆண்டுகளாக யூனியனில் இருக்கும் நான் புதிய உறுப்பினராக சேர வேண்டுமா? டப்பிங் யூனியனிடமும், ராதாரவியிடமும் வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைக்கப்படுகிறேன். யூனியனில் உறுப்பினராக சங்க விதிப்படி 2,500 ரூபாய் கட்டினாலே போதும். அப்படி இருக்கையில் எனக்கு மட்டும் ஏன் ரூ.1.5 லட்சமும் மன்னிப்புக் கடிதமும் என்று தெரியவில்லை’ என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.