#ரசிகர் ஒருவர் தனக்குக் கொடுத்த காதல் கடிதத்தை மிகவும் பத்திரமாக பாதுகாத்து வருகிறாராம் நடிகை கீர்த்தி சுரேஷ்.
அண்மையில் கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது அறிவிக்கப் பட்டது. விருது மகிழ்ச்சியில் தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்தும் வருகிறார்.
தனக்கு அறிவிக்கப் பட்ட விருது குறித்து அவர் தெரிவித்த போது… “சாவித்திரி வாழ்க்கைப் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நான் மீண்டும் ஒரு வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க மாட்டேன். சாவித்திரி படம்தான் நான் நடித்த முதலும் கடைசியுமான வாழ்க்கை வரலாறு படமாக இருக்கும்.
சாவித்திரி என்ற மகா நடிகை வேடத்தில் நடித்த பின்னர் இன்னொரு வாழ்க்கைப் படத்தில் நடிப்பது சிறப்பாக இருக்காது.
நடிகை சாவித்திரியின் வாழ்க்கைப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தபோது, நான் எதுவோ என்னை விட்டுப் போனது போல், மனம் உடைந்து அழுதேன். அந்த படப்பிடிப்பில் எல்லோரும் மனதால் இணைந்திருந்தோம்.
ஒரு முறை நான் நகைக்கடை ஒன்றைத் திறந்து வைக்கச் சென்றபோது ரசிகர் ஒருவர் எனக்கு ஒரு பார்சலைக் கொடுத்தார். அதைத் திறந்து பார்த்தபோது எனது படங்கள் அடங்கிய ஆல்பம் இருந்தது. கூடவே, என்னைக் காதலிப்பதாக எழுதப் பட்ட ஒரு கடிதமும் இருந்தது. கல்லூரி நாட்களில் எனக்கு யாரும் காதல் கடிதமெல்லாம் கொடுத்ததில்லை. எனவே எனக்கு வந்த முதல் காதல் கடிதமாக அதை நினைத்துப் பார்த்து, இப்போதும் அதை பத்திரமாக வைத்திருக்கிறேன்” என்றார்.