
‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படம் சர்ச்சை கிளப்பினாலும், ‘சி’ சென்டர், ‘அடல்ட்ஸ் ஒன்லி’ என்ற பிராண்டிங் காரணமாக அப்பட ஹீரோ ஜி.வி.பிரகாஷ் முதல் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் வரை பலருக்கும் வேறு வாய்ப்புகளைக் கொடுத்தது. ஆனால், இப்போது சிம்புவை வைத்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கிய ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படம், பெரும் பின்னடவைக் கொடுத்திருக்கிறது.
பல மாதங்களுக்குப் பிறகான சிம்பு படம் என்ற எதிர்பார்ப்போடு படம் பார்க்கச் சென்ற சிம்பு ரசிகர்களுக்கே படம் கடும் மன உளைச்சலை உண்டாக்கியதாகக் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.
படத்தை இயக்கிய ஆதிக் ரவிசந்திரனோ புலம்புகிறார் இப்படி … ‘நான் நினைச்ச மாதிரி முழுப்படமும் எடுத்திருந்தா இந்த மாதி ரியான விமர்சனம் வந்திருக்காது. எடுத்த வரைக்குமே நான் நினைச்சதை முழுசா படத்துல கொண்டுவர முடியலை. இன்னும் சொல்லப்போனா, இந்தப் படம் எந்த மாதிரியான சூழல்ல எடுக்கப்பட்டதுனு ரசிகர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதனாலதான் ரசிகர்கள் மத்தியில் இவ்ளோ வெறுப்பு. இதப்பத்தி நான் பேச விரும்பல. ஆனா, ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன்… நான் சொல்ல வந்த விஷயத்துல, 25 சதவிகிதம்தான் படத்துல வந்திருக்கு. நான் தயாரிப்பாளருக்காக விட்டுக்கொடுக்கப் போயி படம் பாதில நின்னுருச்சுனு நினைச்சு… ப்ச்… வேண்டாங்க! இதப் பத்தி நான் பேச விரும்பலை. ஆனா, இப்போ எல்லா தப்பும் என் மேல விழுந்திருச்சு. பரவாயில்லை!’’ என்று விரக்தியான குரலில்.


