அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெயரில் வெளியான செய்தித் தாள் விளம்பரம்தான் இது. இதில் தமிழகம் அப்படியே தடம் புரண்டு கிடந்தது. ஒருவேளை சிம்பாலிக்காக ஓர் அடையாளத்துக்காக அப்படி அச்சிட்டிருக்கிறார்களோ என்னவோ!?
60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2000 வீதம் சிறப்பு நிதியாக வழங்குவதற்கு ரூபாய் 1200 கோடி வாரி வழங்கிய ஏழைப்பங்காளன் தொழிலாளர்களின் பாதுகாவலர் தமிழகத்தின் விடிவெள்ளி எங்கள் கொங்கு நாட்டு தங்கம் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் பாண்டி நாட்டு தங்கம் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும் தமிழகத்தின் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களின் சார்பாக கோடானு கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி பெயரில் கோவை மாவட்ட அஇஅதிமுக மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அணி சார்பில் ஒரு விளம்பரம் இன்று செய்தித் தாள்களில் கொடுக்கப்பட்டிருந்தது!
இந்த விளம்பரத்தில் தமிழகத்தை அப்படியே தலைகீழாகப் புரட்டி போட்டு இருக்கிறார்கள் என்பதுதான் சிறப்பு! 60 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி கொடுத்து தமிழகத்தை புரட்டிப்போட்டார்களோ இல்லையோ தமிழக படத்தை புரட்டிப் போட்டு விட்டார்கள்! ஒரு வேளை அதைத்தான் அடையாளமாக காண்பித்தார்களோ என்னவோ!?
பொதுவாக இதுபோன்ற விளம்பரங்கள் வரும்போது பத்திரிகைகளில் பணிபுரிபவர்கள் எடுத்துச் சொல்லி விளம்பரத்தை மாற்றுமாறு அல்லது தவறு இருந்தால் அதைச் சுட்டிக் காட்டுவார்கள்
ஆனால் எஸ் பி வேலுமணி பெயரில் வெளியான இந்த விளம்பரம் அப்படியே மாறிப் போன தலைகீழ் தமிழகத்துடன் லே அவுட்டுக்கு இடம் விட்டு, எழுத்துக்களுக்கு இடம் கொடுத்து அதற்கு ஏற்ற வகையில் வெளியானதுதான் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது!