பத்து ரூபாய்க்குப் புடவை தருவதாக விளம்பரம் பார்த்ததால், விழுந்தடித்து ஓடி வந்த பெண்களால் ஹைதரபாத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஹைதராபாத் நகரம் சித்திப்பேட்டை என்ற இடத்தில் சி எம் ஆர் ஷாப்பிங் மால் புதுக் கிளையைத் திறந்துள்ளார்கள். விளம்பர உத்தியாக பத்து ரூபாய்க்கு ஒரு புடவை என்று விளம்பரம் செய்திருந்தார்கள்.
இந்த விளம்பரத்தைப் பார்த்ததுதான் தாமதம், பெண்கள் பலரும் வெகு ஆர்வத்துடன் கூட ஆரம்பித்துவிட்டார்கள். பிப்ரவரி 16 நேற்று காலை இந்தச் செய்தி அறிந்து காலையிலிருந்தே பெண்களும் இளம்பெண்களும் கடையின் முன் வரிசை கட்டத் தொடங்கிவிட்டார்கள்.
கடையின் முன்னர் பெரும் கூட்டம் கூடி விட்டது. காலை பதினோரு மணிக்கு கடை ஷட்டரைத் திறந்தவுடன் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு பெண்கள் உள்ளே நுழைந்தனர்.
பத்து ரூபாய் புடவைக்காக நெருக்கியடித்த கூட்டத்தினால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி, பதினைந்து பேருக்கு மேல் பெண்கள் காயமடைந்தனர்.
இம்மாதிரியான கூட்டங்கள் என்றால் திருடர்களுக்குக் கொண்டாட்டம் இல்லாமலா?! அவர்களும் தம் பங்குக்கு கைவரிசையைக் காட்டினர். ஒரு பெண் தன் ஐந்து பவுன் தங்க நகையையும், ஐயாயிரம் ரூபாயும் டெபிட் கார்டும் வைத்திருந்த பர்சை பறிகொடுத்துத் தவித்தார். அப்பெண் நாங்குநூறு மண்டலம் திம்மயாபல்லி என்ற ஊரைச் சேர்ந்த ஊர்மிளா!
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் சிஎம்ஆர் மால் மேலாளர் மற்றும் கடைகளில் விசாரணை நடத்தினர். இந்த நெரிசலில் சிக்கி காயமடைந்த பெண்கள் ஸிஎம்ஆர் கடைக்காரர்கள்தான் தமக்கு சரியான சிகிக்கை அளிக்க வேண்டுமென்று போராட்டம் நடத்தினர்.
மெயின் கதவைத் திறக்காமல் சிறிய செல் கதவு வழியாக புடவை வாங்க வந்த வாடிக்கையாளர்களை அனுப்பியதுதான் தள்ளுமுள்ளுவுக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன் கரீம் நகர், வரங்கல் நகரங்களில் கூட இதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.