தெலுங்கில்: பி எஸ்சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“Knowledge of Polity is the contribution by British to India – அரசாட்சி முறையை பாரத தேசத்திற்கு ஆங்கிலேயர்கள் கற்றுத் தந்தார்கள்.”
“எப்படி பரிபாலனம் செய்ய வேண்டும் என்று உலகிற்கு கற்றுக் கொடுத்தது நாங்களே! பிரபஞ்சத்தில் எல்லா நாடுகளிலும் எங்கள் ஆட்சியே நடக்கிறது. சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்து அனைத்து தேசங்களையும் கைப்பிடியில் வைத்துக் கொண்டிருப்பது எங்கள் புகழே!” என்ற எண்ணத்தில் இருந்தது பிரிட்டன்.
இதனை நம்பிய பாரதிய மேதவிகள் சிலர் பிரிட்டிஷார் நம் நாட்டை விட்டு திரும்பிச் செல்வதை விரும்பவில்லை. சர்ச்சில் இவ்வாறு கூறுகிறார், “I hate Indians. They are beastly people with beastly Religion” – “எனக்குக் பாரதியர்களைக் கண்டால் பிடிக்காது. அவர்கள் மிருகம் போன்றவர்கள். அவர்களின் மதம் குரூரமானது!”.
இது பிரிட்டிஷ் ஆட்சியாளர் நம் செல்வத்தைக் கொள்ளையடிபதற்கும் வரி என்ற பெயரில் இந்தியர்களைப் பீடிப்பதற்கும் உதவியது. அதோடு அவர்களின் அரசாளும் சூத்திரங்கள் பாரதிய ஆட்சியாளர்களின் ராஜ்ஜியங்களை அநியாயமாக அபகரிப்பதற்கு பயன்பட்டன.
“தனிமனித சீலம் நிரம்பிய பாரதிய அரசர்கள் பொதுமக்களைப் பெற்ற பிள்ளைகளைப் போல் பார்த்துக் கொண்டார்கள்” என்று அனேக நூல்களில் வர்ணிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். நம் நூல்கள் இவ்வாறு கூறுகின்றன…
“பிரஜாசுகே சுகம் ராஜ்ஞ: ப்ராஜானாம்ச ஹிதே ஹிதம் !
நாத்ம ப்ரியம் ஹிதம் ராஜ்ஞ: ப்ரஜானாம் து ப்ரியம் ஹிதம் !!”
பொருள்: மக்களின் சுகத்திலேயே அரசனின் மகிழ்ச்சி உள்ளது. மக்கள் நலத்திலேயே அரசனின் நலன் உள்ளது. தனக்கு பிரியமானது அரசனுக்கு நல்லதல்ல. மக்களுக்குப் பிரியமானதே அரசனுக்கு நல்லது!
இதுவே பாரதிய சித்தாந்தம். ஆங்கிலேயர்கள் இதற்கு முழுவதும் விரோதிகள்.
பாரதிய அரசர்கள் பொதுமக்களின் மேல் மிகவும் அன்போடு இருந்தார்கள்.
“தேனீ மலர்களில் மகரந்தத்தை சேகரிப்பது போல் அரசாளுபவன் வரி வசூல் செய்ய வேண்டும்” என்று கூறிய தேசம் நமது. மலருக்குத் தீங்கு நேராமல் தேனைச் சேகரிக்கிறது தேனீப் பூச்சி.
பிரிடிஷார் விதித்த வரிகளின் வரலாறு இதயத்தை நோகச் செய்யும். “கரும்பை இயந்திரத்தில் வைத்துப் பிழிந்து சக்கையாக்கியது போல” என்று வர்ணித்தனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
“மக்கள் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை வாழும்படி நியமத்தோடு அரசாளுவதே அரசனின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும்” என்கிறார் சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில்!
அர்த்தசாஸ்திரம் பற்றி எழுதுகையில் ‘ஆசாரிய புல்லெல ஸ்ரீராமசந்த்ருடு’ இவ்வாறு விவரிக்கிறார்…
“பாரதியர்களுக்கு எப்போது பார்த்தாலும் லௌகீகத்திற்கு அப்பாற்பட்ட பரமார்த்த சிந்தனை தவிர இகலோகத்தோடு தொடர்பான அரச பரிபாலனை விஷயத்தில் சிறிதும் ஞானம் இல்லை என்று ஒரு திட்டத்தோடு கூடிய முறையில் மேற்கத்திய பண்டிதர்கள் பிரச்சாரம் செய்து ஆனந்தம் அடைந்தார்கள். அப்படிப்பட்ட நாட்களில் திடீரென்று இந்த அர்த்தசாஸ்திர நூல் அவர்கள் பார்வைக்கு வரவே என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் அர்த்தமற்ற பலவித வாதங்களில் ஈடுபட்டார்கள். அவை எல்லாம் பொருளற்றவை. பயனற்றவை. பாரத தேசத்தில் இடைவிடாமல் பரிபாலனை தர்மங்கள் பற்றிய நூல்கள் இருந்து வந்துள்ளன. சாண்டில்யர் குறிப்பிட்ட பண்டைய நூல்களைக் கொண்டு இந்த விஷயத்தை தெளிவாக அறியலாம்” என்கிறார்.
வெளிநாட்டார் ஆட்சிக்கு மிக முன்பிருந்தே பாரத தேசத்தில் இருந்த பல ராஜ்ஜியங்களில் பரிபாலனை அர்த்தசாஸ்திரத்தில் இருந்தபடியே நடந்தது என்று கூறுவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. “சிவாஜியின் அரச பரிபாலனை அர்த்தசாஸ்திரத்தின்படி நடந்தது” என்று ப்ரொபசர் எஸ்ஆர் குல்கர்னி தன் மராட்டி நூலில் (சிவகாலீன ராஜநீதி ஆணி ரணநீதி) குறிப்பிடுகிறார்.
ராமராஜ்யம் இன்றுவரை ஒரு ஆதரிசமான பரிபாலனை முறையாக போற்றப்படுகிறது. ராமாயணம் அயோத்தியா காண்டம் 100வது சர்க்கத்திலும் (கஸ்சித் சர்க்கம் என்று புகழ் பெற்றது), மகாபாரதம் சாந்தி பர்வத்திலும் அரசர்கள் கடைபிடித்த தர்மங்கள் பலவற்றைப் பற்றி விவரித்துள்ளன. பிரபஞ்சத்தில் எந்த ஒரு நூலிலும் இது போன்ற விஞ்ஞான கருத்துக்கள் காணப்படாது. அரசனின் தகுதிகள், எப்படிப்படவரை மந்திரியாக நியமிக்க வேண்டும்? ரகசியமாக எந்த அதிகாரிகளை எவ்விதம் பரீட்சிப்பது? மந்திரி சபையில் எத்தனை பேர் இருக்க வேண்டும்? கிராமங்களை எவ்விதம் அமைப்பது? ஒற்றர்படை அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்? முதலான அரசாட்சி முறைகளுக்குப் பிறப்பிடம் நம் பாரத தேசம்.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது, “பாரதியர்களுக்கு அரசாட்சி முறையே தெரியாது!” என்று சில மேல்நாட்டாரும் அந்நிய மதத்தவரும் அவர்களுடைய மானசீக புதல்வர்களான போலி மேதாவிகளும் செய்யும் பிரச்சாரம் எத்தனை நகைப்புக்குரியதோ விளங்குகிறது.
ஆயிரமாண்டுகால அடிமை வாழ்வைக் கடந்த போதிலும் பரிபாலனையில் சுதந்திரம் இப்போது வரை நமக்கு வர வில்லை என்றே கூறவேண்டும்.
பிரிட்டிஷார் தொடங்கிய அரசாட்சி முறைக்கு பதில் பாரதிய அரசாட்சி முறையை எடுத்து வரும் முயற்சிகள் இன்று வரை அர்பணிப்போடு நடக்கவில்லை. இப்போதும் வந்தேறிகள் கொடுத்துச் சென்ற முறைகளே தொடருகின்றன. நம் தேசிய சுய பரிபாலனை முறை அழிந்து போய்விட்டது.
இதற்குத் தீர்வாக அர்த்தசாத்திரம் போன்ற நூல்களை இளைஞர்கள் ஆய்ந்து பரிசோதிக்கும் போதுதான் நம் தேசத்தின் மிக உயர்ந்த ஞானச் செல்வத்தை உலகிற்கு பகிர முடியும்.
‘நாங்களே அறிவாளிகள்! மீதியுள்ளவர்கள் அநாகரிகமானவர்கள்!” என்று பிரசாரம் செய்யும் அந்நிய மதங்களில் துஷ்பிரசங்கம் அடங்கும்.
Source: –ருஷிபீடம் டிசெம்பர், 2018