
- ஜெயஸ்ரீ எம். சாரி, நாந்தேட்.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற வாக்கியமே தை மாதத்தின் சிறப்பை வலியுறுத்துவதாக உள்ளது. பாரதத்தில் வேராக விளங்கும் ‘பாரம்பரியத்தை’ காக்கும் பெரும் பங்கு பெண்களின் கைகளில் உள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது.
பாரதத்தின் பல திசைகளிலும் விதைகளாக பெண்களின் மனதில் விதைக்கப்பட்டுள்ள பல்வேறு கலாச்சாரங்களில் ஒன்றுதான் தை மாதத்தில் கொண்டாடப்படும் சங்கராந்தி பண்டிகை. மகாராஷ்டிர மாநிலத்தில் பெண்கள் சங்கராந்தி அக்கம் பக்கம் வீடுகளில் உள்ள பெண்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்து மஞ்சளும் குங்குமமும் கொடுத்து வெல்லம் கலந்த எள்ளுப் பொடியை பிரசாதமாக தருகிறார்கள். இதற்கு ‘ஹல்தி கும்கும்’ நிகழ்ச்சி என்கின்றனர்.

இந்நிகழ்ச்சியின் போது பெண்கள் தங்கள் வீடுகளை அற்புதமாக அலங்கரித்தும், கோலமிட்டும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். இளம்பெண்கள் முதல் வயதான சுமங்கலிகள் வரை இப்பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர் இந்தக் கொண்டாட்டத்தில் சுவாரஸ்யமான விஷயமாக ‘உகானா கூறுதல்’ என்ற ஒரு பகுதியும் அடங்கும். பழங்காலங்களில் திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் பெயரை குறிப்பிட கூச்சப்படுவார்கள், பெரும்பாலும் கணவரின் பெயரை குறிப்பிடவே மாட்டார்கள்.

அதனால் சங்கராந்தி போது தான் இன்னாரது மனைவி என்பதை குறிக்கும் விதமாக தன் பெயரும் தன் கணவர் பெயரும் வருமாறு வரிகளை அமைத்தது நகைச்சுவையுடன் கவிதை நடையில் கூறுவர். பல மகளிர் சங்கங்களால் ‘உகானா’விற்காக போட்டிகளையும் நடத்தப்பட்டு சிறந்த உகானா கூறும் பெண்கள் பாராட்டப்பட்டு பரிசளிக்கப்படுவார்கள். மராட்டியர்கள் சங்கராந்தி தினத்திலிருந்து ‘ஹல்தி கும்கும்’ நிகழ்ச்சியை கொண்டாடுவர்.
நாந்தேட் நகரில் வ்ருந்தா குல்கர்னி (Vrunda Kulkarni) அவர்களின் இல்லத்தில் காய்கறிகளாலும், இலந்தைப் பழங்களினாலும், வளையல்களாலும் போடப்பட்டுள்ள கோலம்.
மாயா ராஜ்கோரே ( Maya Rajgore) அவர்களின் இல்லத்தில் தென்னகத்தையும், வட இந்தியாவையும் இணைக்கும் விதமாக அமைத்திருந்த காட்சி அனைவரையும் கவர்ந்தது.

அருணா ராஜ்மானே ( Aruna Rajmane) அவர்களின் இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட காட்சியில் சங்கராந்தியின் சாரம் வெளிப்பட்டது.
அம்ருதா கபாலே (Amruta Gabale) அவர்களின் வீட்டில் தேவி வடிவில் அலங்கரிக்கப்பட்டது கொண்டாட்டத்திற்கு முத்தாய்ப்பாய் இருந்தது.
ஸ்வாதி ஜக்கல்வாட் (Swati Jakkalwad) அவர்களின் கற்பனையில் உருவான பிஸ்கட்டுகளினால் செய்யப்பட்ட மூன்று கம்பார்மெண்டுகளாலான ட்ரெயின்.
சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு “பூட் பூட் காகரி’ (Bhood Bhood Ghagari) என்னும் ஒரு நிகழ்ச்சியையும் வைக்கிறார்கள். சிறிய குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து அவர்களின் தலையில் இலந்தைப் பழம், பச்சை பட்டாணி, பச்சை கொண்டைக்கடலை, காரெட், கரும்புத் துண்டுகள், சாக்லேட் வகைகள், பொம்மை வடிவ பிஸ்கட்களை தூவுவார்கள். மற்றக் குழந்தைகள் அவற்றை தங்கள் கைகளில் பிடிப்பார்கள். இந்த முறை நான்கே மாதமான மாஹிரா கிரத்வாட் (Mahira Kiratwad)க்கு “பூட் பூட் காகரி’ செய்யப்பட்டது. குழந்தைகளையும் உற்சாகமாக பங்கெடுத்தனர்.

சங்கராந்தியை தொடர்ந்துவரும் அமாவாசைக்கு முதல் நாள் வரை இதனைக் கொண்டாடுவர். ஒவ்வொரு அமாவாசையன்றும் மராட்டியர்களுக்கு புது மாதம் தொடங்குவதால் அவ்வாறு செய்கின்றனர்.சங்கராந்திக்கு பிறகு வரும் அமாவாசையன்று அவர்களுக்கு மாசி மாதம் பிறந்து விடுகிறது. இந்த நாட்களில் கொண்டாட முடியாதவர்கள் ரதசப்தமி அன்று ‘ஹல்தி கும்கும்’ விழாவினைக் கொண்டாடி அந்த வருடத்திற்கான சங்கராந்தி விழாவினை முடிவிற்கு கொண்டு வருகிறார்கள்.
ஏழை, பணக்காரர் என பாகுபாடற்ற எண்ணங்களோடு, பலதரப்பட்ட, பலமொழிப் பேசும் மக்களின் ஈடுபாட்டோடு கொண்டாடப்படும் ‘ஹல்தி கும்கும்’ விழாவானது இந்திய கலாச்சாரத்திற்கு ஒரு பாலமாக உள்ளது என்றால் மிகையாகாது.




