சிறையில் இருந்து வெளியே வருகிறார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம். ப.சிதம்பரத்தை ஜாமீனில் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினார்கள். ஆனால் அமலாக்கத்துறை இவரை உடனே கைது செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ப.சிதம்பரம்.
அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தில்லி உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், ஜாமீன் வழங்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 28-ஆம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
அப்போது ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இதை அடுத்து, ஜாமீன் நடைமுறைகள் முடிந்து, இன்று மாலை ப.சிதம்பரம் சிறையில் இருந்து வெளியே வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 106 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு அவர் வெளியே வருகிறார்.