புது தில்லி:
காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதை நான் சொல்லவில்லை, காந்திஜியே கனவு கண்டார் என்று பேசினார் பிரதமர் மோடி.
குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் உரையை நிகழ்த்திய பிரதமர் மோடி, மக்களவையில் காங்கிரஸை சாடினார். பின்னர் மாநிலங்களவையில் பேசினார். அப்போது அவர், காந்திஜியின் கனவை நனவாக்குவேன் என்றார்.
மக்களவையைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, மக்களவையில் எனது பேச்சைக் கேட்க யாரும் தயாராக இல்லை. நான் பேசும்போது என்னைப் பேசவிடாமல் அனைவரும் அமளியில் ஈடுபட்டனர். மக்களின் நல்வாழ்வுக்காக இன்னும் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே அரசின் லட்சியம்.
காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூற எனக்கு உரிமை கிடையாது. எனினும் எதிர்க்கட்சிகளுக்கு அறிவுரை வழங்க நான் தயாராகவே இருக்கிறேன். நான் ஒன்றை எழுதினால், எதிர்க்கட்சிகள் அதனை மாற்றி வேறு ஒன்றைப் படிக்கின்றன. மக்கள் நலனுக்காக எதிர்க் கட்சிகள் சிறந்த ஆலோசனைகள் கூறினால் அதனை ஏற்க நான் தயார். என்னையும், எங்களையும் திட்டுவதாக நினைத்துக் கொண்டு, நீங்கள் நாட்டைத் தான் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள். எங்களைப் போன்ற சாமானியர்கள் ஆட்சியில் இருப்பதை சிலர் விரும்பவில்லை.
விமர்சனம் செய்வது ஜனநாயகத்தின் கடமை. பாஜக.,வை விமர்சிக்கலாம். ஆனால், நாட்டை விமர்சிக்க உரிமை இல்லை. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பது எனது கருத்தல்ல. மகாத்மா காந்தியின் கருத்து.
மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைய வேண்டும் என்பதே பாஜக.,வின் நோக்கம். அதற்காக மக்கள் நலன் திட்டங்களில் எதிர்க்கட்சிகளின் கருத்தைக் கேட்கத் தயார். மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இன்னும் ஏராளமானவை செயல்படுத்த வேண்டியுள்ளது
போபால் விஷவாயுக் கசிவு குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடியது போன்ற நிலையைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் வாஜ்பாய் பெயரை பயன்படுத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பேசிய மோடி, புதிய இந்தியாவுக்கு எதிராக காங்கிரஸ் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.