இளம் பெண்களை சபரிமலைக்கு ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறார் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன். பாஜக., இந்து இயக்கங்களின் போராட்டங்களில் இருந்து பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று, தனது குறிக்கோளை நிறைவேற்ற அடுத்த திட்டம் தீட்டியிருக்கிறார் பிணரயி விஜயன்!
உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்க பாஜக, ஆர்.எஸ்எஸ். போன்ற அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதனால், தரிசனத்துக்குச் செல்லும் பெண் பக்தர்களை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய பூஜை, நவம்பர் மாதம் தொடங்கும் மண்டல பூஜை,. தொடர்ந்து, ஜனவரி மாதம் நடைபெறும் மகரஜோதி தரிசனம் சபரிமலை விழாக்களில் மிக முக்கியமான திருவிழா!
மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி தரிசன காலங்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை வருவது வழக்கம். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதும். அப்போது சபரிமலை சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இத்தகைய நெருக்கடிகளை தவிர்ப்பதற்காகவே, சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு ஆன் லைன் தரிசன முறையை அண்மையில் அறிமுகப் படுத்தியது. இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என தேவஸ்வம் போர்டு அறிவித்ததும் ஏராளமானோர் இதில் பதிவு செய்து வருகிறார்கள். இவ்வாறு, சுமார் 3.50 லட்சம் பக்தர்கள் ஐயப்பன் கோவிலில் ஆன்லைன் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் கோவில் நடை திறந்த போது கோவிலுக்கு வந்த இளம்பெண்களை தடுத்து நிறுத்தி பக்தர்கள் திருப்பி அனுப்பினர். இந்நிலையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களில் 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சுமார் 550 பேர் கோவிலுக்கு வர முன்பதிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது, உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக போராட்டக்காரர்களைத் தாண்டி ஐயப்பன் சன்னிதானத்துக்கு பெண்களை அழைத்துச் செல்ல புதிய திட்டம் ஒன்றை பிணரயி விஜயன் யோசித்துள்ளார். அதன்படி சபரிமலை சன்னிதானத்துக்குச் செல்ல விரும்பும் பெண் பக்தர்களை ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வாரத் துவக்கத்தில், தீபாவளியை ஒட்டி இரு தினங்கள் சபரி மலை நடை திறந்த போது, பெண்களை எப்படியாவது அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில், கம்யூனிஸ்ட் கட்சியினரையே பாதுகாவலர்களாக சபரிமலைக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். ஆனால், பக்தர்களின் தீவிர முயற்சியாலும், ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட அமைப்புகளின் பாதுகாப்பாலும் அந்த முயற்சி முறியடிக்கப் பட்டது.எனவே, போராட்டக்காரர்களைக் கடந்து பெண்களை அழைத்துச் செல்ல, ஹெலிகாப்டர் உதவியை நாட இருக்கிறார் பிணரயி விஜயன்.
பம்பைக்கு முன்னதாக நிலக்கல்லில் தற்போது அனைத்து வாகனங்களும் நிறுத்தப் பட்டு, சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு கேரள அரசின் பேருந்துகள் மூலமே பக்தர்கள் பம்பைக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆனால், நிலக்கல் முதல் பம்பை வரையில் போதுமான பஸ் வசதிகளை கேரள அரசு செய்து கொடுப்பதில்லை. எனவே இலவச பேருந்து சேவைக்கு உதவுவதாக ஐயப்ப சேவா சமாஜம் கூறியிருந்தது.
ஆனால் அந்த திட்டத்தை ஏற்காத முதல்வர் பெண்களை எப்படியாவது சந்நிதிதானத்துக்கு அழைத்துச் சென்றே தீருவது என்ற முடிவில், ஹெலிகாப்டருக்கு யோசிக்கிறார் என்பது முதலமைச்சரின் வன்மத்தையே காட்டுவதாக ஐயப்ப பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், சபரிமலைக்கு இளம் பெண்களை அழைத்துச் செல்வதே மாநிலத்தின் முற்போக்குத் தன்மைக்கு சான்று என்று கூறும் பிணரயி விஜயனின் பேச்சு அறுவறுக்கத்தக்க ஒன்று ஐயப்ப பக்தர்கள் கூறுகின்றனர்.