யாசிதி இன மக்கள் பற்றி நமக்கு தெரியும். சிரியா அகதிகள் பற்றியும் தெரியும். பலோச் மக்கள் பற்றியும் கூட ஓரளவுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் நேற்று அமித் ஷா அவர்கள் அறிவிக்கும் வரை ப்ரு (Bru) என்ற பழங்குடி இன மக்கள் பற்றியோ அவர்கள் அனுபவித்து வந்த கொடுமையான துயரங்கள் பற்றியோ நிச்சயமாக நம்மில் பெரும்பாலானோருக்கு என்னவென்றே தெரியாது.
இவர்கள் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ரியாங்க் (Reang) என்ற பழங்குடி இன மக்கள். ப்ரு என்ற மொழியை பேசுவதால் ப்ரு (Oru) இன மக்கள் என்று அறியப்படுபவர்கள். தீவிரமான இந்துக்கள். கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுத்து தங்களது தொன்மையான வழிபாட்டு முறைகளையே தொடர்பவர்கள். அதனாலேயே மிசோரம் மாநிலத்தில் மிகவும் பெரும்பான்மையாக உள்ள அன்பு மயமான கிறிஸ்தவ மக்களால் கொடூரமாக தாக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டவர்கள்.
எவ்வளவு குரூரமான கொடுமைகள் என்றால் 1997ல் இவர்கள் மீது நடந்த கலவரத் தாக்குதலில் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டி தங்களது வீட்டை விட்டு, உடைமைகளை விட்டு ஓடிப்போய் அண்டை மாநிலமான திரிபுராவில் அகதிகளாக முகாம்களில் வாழ்பவர்கள். அகதி முகாம்கள் என்றவுடன் ஏதோ நம்மூரில் உள்ளது போல என்றெல்லாம் கற்பனை செய்ய வேண்டாம். பட்டினிச் சாவுகளும் நோய்த் தொற்றுகளும் சர்வசாதாரணமாக நடக்கும் இடங்கள் அந்த முகாம்கள்.
இவர்களுக்கு திரிபுராவில் எந்த உரிமைகளும் கிடையாது. மிசோரமில் நடக்கும் தேர்தல்களில் தங்களது வாக்குகளை செலுத்தும் உரிமையுமே கூட! மிக சமீபத்தில் 2018ல் நடந்த தேர்தல்களில் தான் இவர்கள் திரிபுராவில் இருந்து வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்து விட்டு மீண்டும் திரிபுராவிற்கு திரும்பினார்கள்.
சொந்த மண்ணில் தங்களது வாழ்க்கையை இழந்து தஞ்சம் புகுந்த இடத்தில் எந்தவித உரிமைகளும் இன்றி நடைப்பிணங்களாக கழிந்து கொண்டிருந்தது இவர்களின் வாழ்க்கை. இந்த அபலைகளின் எண்ணிக்கை என்று பார்த்தோமானால் 5400 குடும்பங்களை சேர்ந்த 34000 த்திற்கும் அதிகமான நபர்களாக இருக்கலாம்.
அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து நிராதரவாக, நிர்க்கதியாக, வெறுமையை மட்டுமே எதிர்காலமாக கொண்டிருந்த இந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. ஆம். இவர்களது துயரங்களின் ஓலங்கள் இறைவனை எட்டியிருக்க வேண்டும். நேற்று அமித் ஷா அவர்கள் கையெழுத்திட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம் மூலமாக அவர்களின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகியுள்ளது.
மத்திய அரசு, மிசோரம் மாநிலம், திரிபுரா மாநிலம் ஆகிய மூன்று தரப்பிற்கும் இடையே நேற்று ஒப்பந்தம் ஏற்பட்டு அதில் உள்துறை மந்திரி அமித்ஷா கையெழுத்திட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு ப்ரு குடும்பத்திற்கும் திரிபுராவில் 30×40 நிலம் வழங்கப்பட்டு அதில் வீடு கட்டிக்கொள்ள ப்ரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 1.5 லட்சம் ரூபாய்கள் நிதியுதவி வழங்கப்படும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4 லட்சம் ரூபாய்கள் வைப்புத் தொகை (Fixed Deposit) வழங்கப்படுவதோடு இரண்டு வருடங்களுக்கு மாதம் ரூ.5000/- ரூபாய்கள் நிதியுதவியும் வழங்கப்படும். கூடுதலாக இரண்டு வருடங்களுக்கு ப்ரு பழங்குடி மக்களுக்கு ரேஷன் பொருட்களும் இலவசம். இவற்றையெல்லாம் செயல்படுத்துவதற்காக திரிபுரா மாநிலத்திற்கு 600 கோடிகள் சிறப்பு நிதியுதவியை மத்திய அரசு வழங்கும்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தருணம் சாத்தியமாகியுள்ளது. பாஜகவின் மணிமகுடத்தில் மேலும் ஒரு ஒளிவீசும் மாணிக்கம்.
- வேங்கட்ரமணன் ஸ்ரீனிவாசன்