1971ஆம் ஆண்டு சேலத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வே.ராமசாமி நாயக்கரால் நடத்தப் பட்ட மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் நடத்தப் பட்ட ஹிந்துக் கடவுளர் அவமானப் படுத்தப் பட்ட மாநாட்டின் படங்களை வெளியிட்ட துக்ளக் பத்திரிகை, அன்றைய கருணாநிதி அரசால் தடை செய்யப் பட்டது. மேலும் அந்தப் பத்திரிகை எந்தக் கடையிலும் ஸ்டால்களிலும் விற்பனைக்கு இல்லாத வகையில் பார்த்துப் பார்த்து பறிமுதல் செய்தது கருணாநிதி அரசு.
இதற்கு அது சொன்ன காரணம், இந்தப் படங்கள் மூலம் இந்து உணர்வாளர்கள் மத்தியில் கோபம் ஏற்பட்டு விடும் என்பதுதான்! இந்துமத உணர்வுகளை கொச்சைப் படுத்தும் வகையிலும் கேவலப் படுத்தும் வகையிலும் ஈவேரா மாநாடு நடத்தலாம், கடவுளர் படங்களை செருப்பால் அடிக்கலாம், மர விக்ரகங்களை எரிக்கலாம், அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடாது! ஆனால் அதனை செய்தியாகப் போட்டால் மட்டும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடுமாம் என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் சோ.
இந்நிலையில் அன்றைய காலத்தில் தடை செய்யப் பட்ட அந்த துக்ளக் இதழை மறு பிரசுரம் செய்து தற்போது விநியோகிக்க வேண்டும் என்று துக்ளக் இதழ் வாசகர்கள் கேட்டுக் கொண்டு வந்தனர். இதற்கு பதில் அளித்துள்ள தற்போதைய துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, 1971 இதழை மறு பிரசுரம் செய்யும்படி பலர் கேட்கின்றனர். ஆனால், அந்த ஒட்டுமொத்த இதழும் இப்போது மறு அச்சடிப்பு செய்ய வேண்டியதில்லை. சேலத்தில் நடைபெற்ற குறிப்பிட்ட சம்பவம் குறித்த பகுதிகளை மட்டும் அடுத்து வரும் துக்ளக் இதழில் மறுபிரசுரம் செய்ய யோசித்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.