துக்ளக் இதழாசிரியர் எஸ்.குருமூர்த்தியின் மயிலாப்பூர் வீட்டில் நேற்று அதிகாலை சிலர் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்தனர். ஆனால் போலீஸாரின் தீவிர கண்காணிப்பால் போலீஸாரைக் கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்நிலையில், தமது இல்லத்தில் வீசப்பட வைத்திருந்த பெட்ரோல் குண்டுகள் இவை தான் என்று அதன் படத்தை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் எஸ்.குருமூர்த்தி. இந்த பெட்ரோல் குண்டுகள்தான் குற்றம்சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து போலீஸார் இன்று வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில்,
ஜன.26 நேற்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் மயிலாப்பூர் தியாகராஜபுரத்தில் வசிக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசும் நோக்கத்தில் இரு சக்கர வாகனங்களில் வந்த நபர்களை அங்கு பாதுகாப்பில் விழிப்புடன் இருந்த காவலர்கள் கண்டு விரட்டியவுடன் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் நேரடியாக சென்று விசாரணை செய்து பாதுகாப்பில் இருந்த காவலர்களைப் பாராட்டினார்.
காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சசிகுமார் (33), ஜனார்த்தனன் (36), பாலு (30), தமிழ் (23), பிரசாந்த் (23), சக்தி(22), தீபன் (32), வாசுதேவன் (32) ஆகிய 8 பேர் கைது செய்யப் பட்டனர்.
கைது செய்யப் பட்ட சசிகுமார் மீது ஏற்கெனவே ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் ஹோட்டல் மற்றும் சத்யம் தியேட்டர் ஆகியவற்றில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்குகள் உள்ளிட்ட பல நிலுவையில் உள்ளன.,. என்று கூறப் பட்டிருந்தது.