சென்னை:
ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலைவாசி உயராது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக, சென்னை வணிகர்களின் கருத்துக்களை அறிய, சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சரக்கு சேவை வரி குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி-யில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் பிரதமர் மோடியால் திணிக்கப்படவில்லை. நாடு முழுவதும் வரும் ஒன்றாம் தேதி முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வர உள்ளது. ஜிஎஸ்டி குறித்து தமிழகத்தில் உள்ள வணிகர்கள் உட்பட அனைவரின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்து வருகிறோம். வரி செலுத்தும் முறையில் குறைபட்டுக் கொண்டு ஜிஎஸ்டியை குறை சொல்ல வேண்டாம். ஜிஎஸ்டி வரிவிதிப்பால் நிச்சயமாக விலை வாசி உயராது. ஆட்களை வைத்து பதிவு செய்த வரி விகித முறை கணினி மூலம் பதிவேற்றப்படும் என்று கூறினார்.
கூட்டங்கள் நடத்தி வணிகர்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். ஜி.எஸ்.டி வரி குறித்த சந்தேகங்களுக்கு இணையதளத்தில் தெளிவான விளக்கங்கள் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். மேலும் பிராண்ட் பெயர் இல்லாமல் விற்பனை செய்யும் பொருட்களுக்கு வரி கிடையாது என்றும், சிறந்த ஒத்துழைப்பை நல்கி வரும் தமிழக அரசுக்கு நன்றியும் கூறினார்.