தெலங்காணா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் ஒரு மோசடி ஆசாமியை டாஸ்க் போர்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்னிந்திய மத்திய புலனாய்வு அதிகாரி என்று கூறிக் கொண்டு கோடிக்கணக்கான ரூபாய்களை வசூல் செய்த ரமேஷ் என்ற மோசடி நபரின் விவரங்களை காவல் ஆணையர் வி.பி. கமலாசன் ரெட்டி புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
வாரங்கல் அர்பன் மாவட்டம் பீமதேவரபல்லி மண்டலம் மாணிக்யாபூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வாரங்கல் மாவட்ட முதன்மை நீதிபதி தன்னை புலனாய்வு அதிகாரியாக நியமித்து ஆணை கொடுத்ததாக போலிச் சான்றிதழ் தயாரித்தார் என்று காவல்துறை ஆணையர் கமலாசன் ரெட்டி தெரிவித்தார் .
மத்திய, மாநில அரசுத்துறைகளில் அரிதாக இருக்கும் மிகப்பெரிய போஸ்ட் தன்னுடையது என்று கூறிக் கொண்டு அவர் சுற்றியுள்ளார். அதை வைத்து அப்பாவி மக்களிடம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என்றார்.
கரீம்நகர் மாவட்டம் ஹுஜுராபாதிலுள்ள டிசிஎம்எஸ் காம்ப்ளக்ஸில் சிவில் வழக்குகளை தீர்த்து வைப்பதற்கு ஓர் அலுவலகம் கூட திறந்து சோசியல் மீடியா மூலம் பிரச்சாரம் செய்து மோசடியில் ஈடுபட்டார் என்று அவர் கூறினார்.
கோதாவரிகனியைச் சேர்ந்த ஒரு தொழிலாளரின் மகன் உள்பட பலருக்கும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 40 லட்சம் ரூபாய் வசூல் செய்த ரமேஷ், கடன் பெயரில் மேலும் நான்கு கோடி வரை வசூல் செய்ததாகக் கூறினார் ஆணையர்.
வாரங்கல் மாவட்ட சிவில் நீதிமன்ற ஜுடிசியல் விஜிலென்ஸ் அதிகாரி என நம்ப வைப்பதற்காக தன் இரண்டு கார்களின் மேல் ஜூடிசியல் துறைக்கு தொடர்புடைய ஸ்டிக்கர்களை ஒட்டி ஊர் சுற்றி வருவது வழக்கம் என்றார் கமலாசன் ரெட்டி.
புதன்கிழமை அவரை காவலில் எடுத்து அவரிடம் இருந்து போலி ஆவணங்களையும் நீதிபதி பெயரில் தயாரித்த போலி உத்தரவு ஆணைகளையும் ஐடி கார்டுகள், இரண்டு கார்கள், செல்போன்கள், பிற ஆவணங்களையும் கைப்பற்றியதாக காவல் ஆணையர் கமலாசன் ரெட்டி தெரிவித்தார்.