அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்துள்ளதாக, அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதிமுக.,வில், முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே போட்டி எழுந்தது. கட்சி எனக்கு ஆட்சி உனக்கு என்று இருவரும் செயல்பட்டு வந்தநிலையில், திடீரென அம்மா சுட்டிக் காட்டிய முதல்வர் ஓபிஎஸ் என்று கூறி ஓபிஎஸ்., தரப்பினர் போஸ்டர் அடித்து ஒட்டினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்.7ம் தேதி அறிவிக்கப்படும் என அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் அறிவித்தனர். இதற்காக இரு தரப்பினரும் இரு அணியினராக ஏற்படுத்திக் கொண்டு, மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக.,வின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். வழிகாட்டுதல் குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்பி வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ், மற்றும் ஜேசிடி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்பி., கோபால கிருஷ்ணன், மாணிக்கம் (சோழவந்தான் எம்எல்ஏ), முன்னாள் அமைச்சர் மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வமே வெளியிட்டார். அதில், எடப்பாடி பழனிசாமி தான் வரக்கூடிய தமிழக சட்டசபைக்கான அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளர் என அக்கட்சியின் சார்பாக அதிகாரபூர்வமாக அறிவிப்பதாகத் தெரிவித்தார். முதல்வர் வேட்பாளர் பழனிசாமிக்கு, பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார்.
இதை அடுத்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முன்னதாக, நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீண்டும் மீண்டும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்டோர் முன்னாள் அமைச்சர் வளர்மதி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோரும் இரு தரப்பிலும் பேசி வந்தனர்.
அப்போது, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றும், அதிமுக கட்சிக்கு ஒரே தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இருப்பார் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் முடிவாகிவிட்டதாக தகவல் வெளியானது.
மேலும், அதிமுகவின் பொதுக்குழு தேதியும் அறிவிக்கப்படலாம் என்றும், பொதுக்குழுவில் கட்சியின் விதிகளில் திருத்தம் செய்து, இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கிவிட்டு, ஒரே ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் அறிவிக்கப்பட இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், ஒருங்கிணைப்பாளர் என்ற அளவில் பொறுப்பு அறிவிக்கப் படும் என்றும் கூறப்பட்டது.